Sunday, April 10, 2016

பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு நன்றி!: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று வெளியிட்டிருக்கிறார். நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, என்னவோ... 8 மாதங்களுக்கு வெளியிடப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க.வின் திட்டங்களாக  அறிவித்திருக்கிறார் கலைஞர். அந்த வகையில் பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு தனி அமைச்சர் நியமிக்கப் படுவார், ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்படும், பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க வல்லுனர் குழு அமைக்கப்படும், மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்,  சிறு&குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் சந்தை அமைப்பு ஏற்படுத்தப்படும், விதை நெல் இலவசம், உழவுக் கருவிகளை வாங்க உதவி, ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம், தோனி மடுவு பாசனத் திட்டம், கல்வித்தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு, கிரானைட் - தாது மணல் விற்பனையை அரசும், தனியாரும் இணைந்து மேற்கொள்ளுதல், தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, வள்ளலார் நினைவிடம் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமானத் திட்டங்கள் அனைத்தும் பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கையிலிருந்து எடுத்தாளப் பட்டவையாகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது அண்ணாவின் கொள்கை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு என்பது அவர் வழி வந்த கலைஞர் கொள்கை. அதனால் தான் சிறிதும் யோசிக்காமல் பா.ம.க.வின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து வெளியிடச் செய்திருக்கிறார். மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கலைஞர் அறிவித்தார். லோக் அயுக்தா, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை பா.ம.க. வலியுறுத்தியதும் தான், திமுகவும் அவற்றைப் பற்றி பேசத் தொடங்கியது. அப்போதே திமுகவின் தேர்தல் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதியாகத் தான் இருக்கும் என்று எண்ணினேன். எனது எண்ணம் அப்படியே நடந்தேறியிருக்கிறது.

மது ஒழிப்பு தொடங்கி ஊழல் ஒழிப்பு வரை அனைத்து திட்டங்களுக்கும் பா.ம.க. மட்டும் தான் ராயல்டி வாங்கி வைத்திருக்கிறதா? மற்ற கட்சிகள் அவற்றை பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி தி.மு.க.வினரால் எழுப்பப்படலாம். அந்த வினா நியாயமானது தான். அதேநேரத்தில் இந்தத் திட்டங்கள் எதுவும் புதுமையானவை அல்ல. பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருபவை தான். தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த பெருமைக்குரிய கலைஞர் இத்திட்டங்களை தமது முந்தைய ஆட்சிகளிலேயே நிறைவேற்றியிருக்கலாம். உழவுக்கு தனி நிதிநிலை அறிக்கை, நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சர், முழு மதுவிலக்கு ஆகியவற்றை செயல்படுத்தும்படி கலைஞரிடம் நானே பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால், அப்போதெல்லாம் அவற்றை நிறைவேற்றாமல், இப்போது பாட்டாளி மக்கள் கட்சி அந்த திட்டங்களை வாக்குறுதியாக அளித்த பிறகு, அதை தி.மு.க.வும் அப்படியே பின்பற்றுவதால் தான் பா.ம.க.வின் திட்டங்களை திமுக காப்பியடிப்பதாக கூறவேண்டிய கட்டாயம் உருவெடுக்கிறது.

ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை பற்றி  6 மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் அவற்றை வலியுறுத்தாதது ஏன்?  1973 ஆம் ஆண்டிலேயே லோக் அயுக்தாவுக்கு இணையான பொது ஊழியர் (குற்ற நடவடிக்கை) சட்டம் கொண்டு வந்ததாகவும், பின்னர் முதல்வராக வந்த எம்.ஜி.ஆர் அதை ரத்து செய்து விட்டதாகவும் கலைஞர் அடிக்கடி கூறுவதுண்டு. உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் நோக்குடன் அச்சட்டத்தை அப்போது கலைஞர் கொண்டு வந்திருந்தால், அச்சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அச்சம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே கலைஞருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு, பின்னாளில் சர்க்காரியா ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட புகார்கள் குறித்து அந்த சட்டத்தின்படி விசாரணை நடத்த ஆணையிட்டு, நீதியின் முன் தம்மை  நிறுத்திக் கொண்டாரா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு கலைஞர் விடையளிப்பாரா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டு வருவதாக கடந்த காலங்களில் 5 முறை வாக்குறுதிகளை வழங்கி அத்தனை முறையும் தமிழக மக்களை ஏமாற்றியவர் கலைஞர். தமிழ்நாட்டில் முதல் நாள்... முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு என்ற முழக்கத்தை பா.ம.க முன்வைத்தவுடன், அதே முழக்கத்தை தி.மு.க.வும் முன்வைத்தது. ஆனால், இப்போது அதிலிருந்தும் தி.மு.க. பின்வாங்கி விட்டது. முதல் நாளில் முதல் கையெழுத்தில் மது விலக்கை ஏற்படுத்துவதாக கூறிவந்த கலைஞர், இப்போது தனிச் சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக கூறுகிறார்.

 டாஸ்மாக் நிறுவனத்தின் பணிகளை மாற்றியமைப்பதற்கு வேண்டுமானால் சட்டத் திருத்தம் தேவைப்படலாம்; அதை பின்னாளில் கூட செய்து கொள்ளலாம். மதுவிலக்கை நடை முறைப்படுத்த சட்டத் திருத்தம் தேவையில்லை. ஆனால், இப்போது சட்டம் கொண்டு வந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறுவதன் மூலம் மதுக்கடைகளை மூட கூடுதல் கால அவகாசம் கோருகிறார் கலைஞர். இப்போது கூடுதல் அவகாசம் வாங்கிக் கொண்டு, பின்னாளில் மதுவிலக்கை கிடப்பில் போடுவது தான் தி.மு.க.வின் திட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களின் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது.

1989 ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தாது மணல் விற்பனையை  தனியாருக்கு தாரை வார்த்தது கலைஞர் தான். அதேபோல், கிரானைட் கற்களை வாங்கி விற்பனை செய்யும் உரிமையை 1989 ஆம் ஆண்டில் தமது மகன் மு.க. அழகிரி, முன்னாள் மருமகன் அதிபன் போஸ் ஆகியோருக்கு வாரி வழங்கியது கலைஞர் தான். அப்படிப்பட்ட கலைஞர் இப்போது கிரானைட், தாது மணல் ஊழலை தடுக்கும் வகையில் அவற்றின் விற்பனையை இளைஞர்களைக் கொண்டு நடத்தப்போவதாக கூறுவது நல்ல நகைச்சுவை. மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 50 ஆண்டுகளாக மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வந்தன என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து இத்தனைத் திட்டங்களை காப்பியடித்த தி.மு.க. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான இடு பொருட்களை  இலவசமாக வழங்கும் திட்டத்தை மட்டும் அறிவிக்கவில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுகவுக்கு அக்கறையில்லை, கல்வி நிறுவனங்களின் வருமானத்தையும், அதன்மூலம் ஆட்சியாளர்களுக்கு வரும் வருவாயையும் இழக்க தயாரில்லை என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுப்பதுடன் பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைக்கும் கட்சி எது என்பதை மக்கள் அறிவார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற் றத்திற்காகவும் சிறப்பான செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறன் கொண்ட கட்சி எது என்பதையும் மக்கள் அறிவார்கள். அந்தக் கட்சி பா.ம.க. தான் என்பதை மே 19 தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.’’என்று தெரிவித்துள்ளார்.

Monday, April 4, 2016

முதலமைச்சர் வேட்பாளர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை: அன்புமணி





பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பாமக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து 10 நாட்களாகியும், இதுவரை அவர் எதுவும் பேசவில்லை. பேசாதது ஏன். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. 

என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர், மறுநாள் இரண்டு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்தேன். ஒவ்வொரு மாவட்டமாக மக்களை சந்தித்தேன். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இவ்வாறு கூறினார். 

வாக்களித்த மக்களுக்கு பா.ஜ.கவின் தண்டனையா? ராமதாஸ் கண்டனம்



பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.19 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 61.32 ரூபாயாகவும், டீசல் விலை 50.09 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அடித்தட்டு மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாகக் கூறி கடந்த மார்ச் 17 ஆம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.06 ரூபாயும், டீசல் விலை 1.96 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலைகள்  உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான 35 நாட்களில் பெட்ரோல் விலை இரு தவணைகளில் 5.25 ரூபாயும், டீசல் விலை 3 தவணைகளில் 4.47 ரூபாயும் உயர்த்தப் பட்டிருக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த போது கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது கிடையாது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 1, 16 ஆகிய தேதிகளில் தான் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், இம்முறை அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருந்து, விலையை உயர்த்தியதிலிருந்தே மையஅரசின் நேர்மையின்மை அம்பலமாகி விட்டது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். கச்சா எண்ணெய் விலைகுறைவின் பயன்களை மக்களுக்கு தராமல் அரசே அனுபவிப்பது முறையா? என வினா எழுப்பப்பட்ட போது மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. எனினும் நிலைமையை சமாளிக்கும் வகையில்,‘‘ எரிபொருள் விலை மிகக் குறைவாக இருந்ததால் தான் வரிகளை உயர்த்தினோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்துகிறோம். எரிபொருள் விலைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரும் போது அதை சமாளிக்க கலால் வரிகளை அரசு குறைக்கும்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். அந்த வாக்கை காப்பாற்ற நினைத்திருந்தால் இப்போது கலால் வரியை கணிசமாக குறைத்து விட்டு இந்த விலையேற்றத்தை தவிர்த்து இருக்கலாம்.

அடுத்தடுத்து 3 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதாலும், தமிழகத்தில் சாலை பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் சரக்குந்து வாடகையை உயர்த்தப்போவதாக அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்போது மீண்டும்  டீசல் விலை உயர்த்தப்பட்டு  இருப்பது சரக்குந்து கட்டணம் மேலும் உயர்த்தப்படுவதற்கு தான் வழிவகுக்கும். இதன் விளைவாக பாலில் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். யாருக்கோ பயன்படும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக எரிபொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது என்ன வகையான ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

முந்தைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட போது அதை எதிர்த்து பாரதிய ஜனதா போர்க்கோலம் பூண்டது. எரிபொருள் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கண்ணீர் வடித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறையும் என  பிரதமர் வேட்பாளர் முதல் மக்களவை உறுப்பினர் வேட்பாளர் வரை அனைவரும் வாக்குறுதி அளித்தனர்.  ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு, முந்தைய அரசு செய்த தவறுகளை மட்டுமின்றி, செய்யாத தவறுகளான கலால்வரி உயர்வையும் சேர்த்து செய்கிறது பாஜக. இவற்றையெல்லாம் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த தண்டனையாகவே பார்க்கத் தோன்றுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணர்ந்து அவற்றை நடுவணரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் அனுபவித்து வரும் வலியை  பாரதிய ஜனதாவும் அனுபவிக்கும் நிலையை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, March 29, 2016

தோசையை மாற்றிப் போட்டாலும்” கொள்கை அளவில் ஒற்றுமையாக இருக்கும் திமுக, அதிமுக- ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மக்கள் தோசையை மாற்றிப் போட்டு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் மக்களைச் சுரண்டும் கொள்கைகளில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 28 ஆவணங்களை வெளியிட்டு உள்ளோம். இதுவரை 15 வரைவு பட்ஜெட்டுகளை வெளியிட்டுள்ளோம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிட்டு வருகிறோம்.



பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்காக போராடி வருகிறேன். போராட்டக்காரன், போராளி என்று அழைப்பதே எனக்கு பிடிக்கும். பா.ம.க முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி, தன்னுடன் நேருக்குநேர் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தும் எந்தக்கட்சியும் வரவில்லை. அன்புமணியிடம் திறமை உள்ளது. அவருடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் செய்வது, இலவசங்களை கொடுப்பது, மதுவை கொடுப்பது போன்ற கொள்கைகளில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தோசையை மாற்றி போடுவது போல 5 முறை கருணாநிதிக்கும், 3 முறை எம்.ஜி.ஆர், 3 முறை ஜெயலலிதா என 2 கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால், அவர்கள் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்கிறார்கள். இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. கல்விக்கூடங்களை தனியார் நடத்துகிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

Thursday, March 17, 2016

ஊழல் வழக்கில் அமைச்சர் உதவியாளர் கைது: அமைச்சர்களை தப்ப விடக்கூடாது!: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி  ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக சுற்றுலா அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி  கைது செய்யப்பட்டிருக்கிறார்; அமைச்சரின் மகன் தேடப்படுகிறார். இந்த ஊழலில்  மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக கடந்த பல ஆண்டுகளாகவே  குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாது மணல், கிரானைட், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுத்தல், மின்சாரம், பருப்பு, முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்தல், அரசுப் பணிகள் சார்ந்த ஒப்பந்தங்களை பெற்றுத் தருதல், வேலை வாங்கித் தருதல் என்று பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் நடப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்  ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக  ஆளுனரிடம் அளித்த புகார் மனு மீது  கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், கிருபானந்த முருகன் என்பவர் ஆட்சியாளர்களின் முழு பாதுகாப்புடன் நேற்று அளித்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப் படுகிறார்.  அமைச்சர் சண்முகநாதனின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதி மற்றும் பொதுப்பணி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக கிருபானந்த  முருகனிடம் வாக்குமூலம் வாங்கப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ, இல்லையோ அதை காட்டி சில திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். சாதாரண நேரத்தில் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டால் புகார் கொடுத்தவர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது ஊழல் புகார் மீது அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஊழலை ஒழிக்க தமிழக ஆட்சியாளர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதல்ல... ஊழல் கணக்கு&வழக்கில் நடந்த சில தவறுகளை சரி செய்ய ஆளுங்கட்சி மேலிடம் துடிப்பது தான் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு கூட தெரியும். ஊழல் புகார் மீதான நடவடிக்கைக்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவின் தளபதிகளாக  இருந்து பல்வேறு பேரங்களை முடித்த மூத்த அமைச்சர்கள் இருவருக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்றெல்லாம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிடக் கூடிய விஷயமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஊழல்களை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகும்.

ஊழல் குற்றச்சாற்றின் அடிப்படையில் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பதும், அமைச்சரின் மகன் தேடப்படுவதும், மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதும் அவர்களுடன் மட்டுமே முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதில் எதையும் ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காது. மாறாக,  நடைபெற்ற ஊழல்களுக்கான கணக்கை சரியாக காட்டாததற்காகத் தான் நடவடிக்கை பாய்கிறது.

எனவே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள மூத்த அமைச்சர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  அவர்களுக்கெல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் இம்முறைகேடுகளில் பங்கு உண்டு என்பதால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’’

Wednesday, March 9, 2016

தொழில் அனுமதி ஊழலில் தமிழகத்துக்கு முதலிடம்: ஜெயலலிதா அரசின் சாதனை!: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் எத்தகைய ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு இது தான் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி எதிர்மறையான சாதனைகளைத் தான் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த தொழில் அனுமதி ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் 20 பெரிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக தில்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு  நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

டது. இவற்றில் தொழிலாளர் வளம், ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் இவை சாத்தியம் ஆகியிருக்கின்றன.

ஆனால், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‘நல்ல வணிக தட்பவெப்பநிலை’யில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நல்ல வணிக தட்பவெப்பநிலை நிலவுகிறதா? என்பது, தொழில் தொடங்க அனுமதி அளிக்க கையூட்டு கோரப்படுகிறதா? அனுமதி தர அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? சுற்றுச்சூழல் அனுமதிக்கு எவ்வளவு காலம் ஆகிறது? என்பன உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஊழலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து தொழில்துறையினரும் (100%) தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பெருமளவில் பணத்தை கையூட்டாக தர வேண்டும்; இல்லாவிட்டால்  தொழில் தொடங்க அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இந்த புள்ளிவிவரம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் போல கற்பனையாக எழுதப்பட்டதல்ல. மாறாக தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் நேரடியாக பெறப்பட்டதாகும். தமிழகத்தில் இப்போது தொழில் நடத்துபவர்கள் அனைவரும் அதற்காக  ஆட்சியாளர்களிடம் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தான் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. மாறாக இது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இதுபற்றி ஏராளமான ஆதாரங்களுடன் நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு உள்ளேன். ஏற்கனவே தொழில் தொடங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கும் போது,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார்.

 அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது மிகப் பெரிய தொகை’’ என்று கூறியிருந்தார். இப்போது இந்த தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் எனது குற்றச்சாற்று உண்மை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்வளம்  பெருகாததற்கு காரணம் ஊழல் தான் என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை நிலவுவதால் தான் தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு குவிந்தாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதுவரை ஒரு புதிய தொழிற்சாலைக்கு கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த அவலநிலைக்கு காரணம் ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆட்சியாளர்களின் ஊழல் வெறி காரணமாக தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 70 நாட்களில் பா.ம.க. ஆட்சி அமையும் போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்போது தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதை தீர்மானிப்பதற்கான 5 அம்சங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்பது உறுதி!’’

Tuesday, March 8, 2016

மீண்டும் தலைதூக்கும் கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ராமதாஸ்

சென்னை: காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு சென்னையில் மீண்டும் தலைதூக்கியுள்ள கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை கோயம்பேடு சந்தை அருகில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த கும்பலை காவல்துறை கைது செய்து, அக்கும்பலிடமிருந்து அதிநவீன துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறது. சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தடையும், அச்சமும் இல்லாமல் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. View Photosசென்னையில் பிடிபட்ட கும்பல் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் இப்போது புதிதாக ஈடுபட்டவர்கள் அல்ல. 4 பேர் கொண்ட இக்கும்பல் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பல வாரங்களாக இவர்களை கண்காணித்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பாக்கி வாங்க விரும்பும் போக்கிலிகளைப் போல நடித்து ஓரிடத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.பிடிபட்ட கும்பலும் நீண்டநாட்களாக கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து ரூ.1 லட்சத்துக்கு விற்பதையும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, மேலும் பல கும்பல்களும் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டிருக்கின்றன. தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் தலைவிரித்தாடுவதை இந்த வாக்குமூலம் உறுதி செய்கிறது.தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. ஏதேனும் பெரிய அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் போது கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதும், அதன்பின் நிறுத்தப்படும் கள்ளத் துப்பாக்கி விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தலைதூக்குவதும் வாடிக்கையாகிவிட்டன.கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான எந்த முயற்சியையும் தமிழகத்தை ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேற்கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகியிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆலமரமாக விழுது விட்டிருக்கிறது.கள்ளத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் காமேஷ், அவருடன் வந்த போக்கிலி ஒருவரால் கள்ளத்துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மதுரையில் சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜு பயன்படுத்தி வந்த இரு அலுவலகங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.அதற்கு ஒருவாரம் முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. அண்மையில் சென்னை வியாசர்பாடியில் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்தனர். இந்த குற்றச்செயல்கள் நடந்து பல மாதங்களாகியும் இவற்றில் ஒரு குற்ற வழக்கில் கூட இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் 5 ஆண்டுகளில் சட்டம் -ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9948 படுகொலைகள், சுமார் ஒரு லட்சம் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்துள்ளன. இவை போதாது என கள்ளத்துப்பாக்கி கலாச்சாரமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை தகர்த்து எறியும் திறமை தமிழக காவல்துறைக்கு உண்டு. ஆனால், இதுவரை ஆட்சியாளர்களின் பிடியில் இருந்ததால் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. இப்போது அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்கள் பிடி அகன்றுவிட்ட நிலையில், காவல்துறை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: