Wednesday, October 28, 2009

5வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்: ராமதாஸ்

ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது.

சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும், இராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும், கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

அங்கு அன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று டாக்டர் ராமதாசை வழியனுப்பும் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களை ராஜபக்ச கொன்று குவித்த இரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று இரத்தக்கறை படிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.

பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்களுடைய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்கள் ராஜபக்சவுடன் கைகுலுக்கி விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி இருக்க முடியுமா?

அப்படி அவர்கள் திரும்பி இருந்தால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாவோடு சேர்ந்து கொள்ளுங்கள், டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சிங்களவனோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி இருப்போம்.

ஆனால், இந்த குழுவுக்கு எப்படி மனம் வந்ததோ, அங்கே போய் ராஜபக்சவுடன் கைகுலுக்கி பேசி தேனீரையோ, எதையோ சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். இந்த குழுவினர் முதல்வரை சந்தித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். டெல்லிக்கு சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தும் அறிக்கை தந்து இருக்கிறார்கள்.

டெல்லியில் தரப்பட்ட அறிக்கையின் விபரங்கள் என்ன என்பதை இன்னும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அந்த விபரங்களை உடனே வெளியிட வேண்டும். 29 ம் தேதி நாங்கள் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்குள் இந்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 68 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்ச, அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல திருப்பம் இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாராட்ட வேண்டும். காலம் கடந்தேனும் இந்த நிலை எடுத்த அமெரிக்காவை நாம் பாராட்ட வேண்டும். இந்த அறிவிப்போடு நின்று விடாமல் அதே வேகத்தில் ராஜபக்சவையும், அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒபாமாவை கேட்டுக் கொள்கிறோம்.

அப்போது தான் அவர் பெறுகின்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும். விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்.

அதுதான் இறுதியான ஈழ விடுதலைப் போராட்டமாக இருக்கும். அதன் முடிவில் நிச்சயம் ஈழ விடுதலை கிடைக்கும். அதற்காகவும், முள்வேலி முகாம்களில் அடைப்பட்டு உள்ள 3 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் வலியுறுத்தியே எங்களுடையே இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இதே போல தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களவர்களை வெளியேற்றக் கோரியும் நாங்கள் இந்த பிரச்சார பயணத்தை நடத்துகிறோம் என்றார்.

தமிழனை தேடி கொண்டிருக்கிறேன்-ராமதாஸ்

திண்டிவனம்: டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனத்தில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழப் பிரச்சனைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனையே தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

''தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்?'' என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

இலங்கை பிரச்சனைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் இல்லை.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி அல்ல.

இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, இலங்கை பிரச்சனைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?.

பிகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பிகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால், தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது.

விடுதலைப் போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும் என்றார்.

Thursday, October 22, 2009

செம்மொழி மாநாட்டில் பங்கேற்கிறோம் - பாமக

சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாமகவும் பங்கேற்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதிக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:

2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.

கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்று உறுதியளித்து ஒத்துழைப்பை கோரியிருக்கிறீர்கள். உங்களது இந்த உறுதிமொழிக்கும், ஒத்துழைப்பு கேட்டு அழைப்பு விடுத்ததற்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1966-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கோவையில் நடைபெறுகிற மாநாடு இந்த வரிசையில் இடம்பெறுமா? அல்லது உலக தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் தனித்து நிற்குமா? என்ற சர்ச்சையில் நுழைய விரும்பவில்லை.

எனினும், உலக உருண்டையில் ஒரு பகுதியில் உள்ள தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், தாய் தமிழகத்தில் கோலாகலமாக மாநாடு நடத்தப்படுவது தேவையா? கொஞ்சக்காலம் பொறுத்திருந்து இன்னும் சிறப்பாக நடத்தலாமே என்று எழுப்பப்படுகின்ற வாதத்தை எளிதில் தள்ளிவிட முடியாது என்பதை நினைவூட்டாமல் இருக்க முடியவில்லை.

எனினும் தமிழ், தமிழ் வளர்ச்சி தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதால் ஆறுதல் கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதே நேரத்தில், இத்தகைய மாநாடுகளினால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாநாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் என்ன? இதுவரையில் நடைபெற்றிருக்கும் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவற்றிற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறோமா? என்பவை குறித்து சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்னை தமிழுக்கு அரியணையை அளிக்கும் பணியில் முழுமை அடைந்திருக்கிறோமா என்றால், `இல்லை' என்று நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகள் எந்தப் பெயரில் நடந்தாலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பது முழுமை பெறுவதும், தமிழ் பயிற்று மொழி என்பது நடைமுறைப்படுத்துவதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அழியாத அத்தியாயங்களாக இருக்கும் என்பதில் உங்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியான தமிழ் மட்டுமே அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி நிறைவடையும் என்பது, சமச்சீர் கல்வி குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் அறிஞர் குழுவினரின் ஒருமித்த கருத்தாகும். இந்த லட்சியத்தை படிப்படியாக எட்டலாம் என்பதை விட்டுவிட்டு, இனி தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் தமிழே பயிற்சி மொழியாக இருக்கும் என்று சட்டம் இயற்றி அறிவித்து நடைமுறைப்படுத்துங்கள்.

இந்த அவலநிலைகளை எல்லாம் உடனடியாக மாற்ற தமிழ் அறிஞர்களை கொண்ட குழுவினை அமைத்து ஒருசில வாரங்களில் கலந்தாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. இந்த அவகாசத்தை பயன்படுத்தி தேவையான சட்டங்களையும், அரசாணைகளையும் வெளியிட்டு அனைத்து நிலையிலும் தமிழ்; அதுவும் கலப்படம் இல்லாத தமிழ் என்ற நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இம்முயற்சிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புத் தருகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், கோவையில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது.

மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ் .

Tuesday, October 20, 2009

விவசாயிகளுக்கு ஊதியம் தர ராமதாஸ் கோரிக்கை

சென்னை: விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பில் விவசாயிகளுக்கான கொள்கை அறிக்கை குறித்த கலந்துரையாடல் சென்னை யில் நடந்தது.

கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

விவசாய தொழிலை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். வரும் தலைமுறை விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை நடக்க வேண்டுமென்றால் விவசாய தொழிலில் ஈடுபடுவருக்கு நேடியாக ஊதியம் கிடைக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அதே போல் விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பரிந்துரைக்க உழவர் வருவாய் குழு அமைக்க வேண்டும்.

விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். இந்த உழவர் ஊதியத்தை ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்து உயர்த்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உழவர் பேரியக்க தலைவர் சடகோபன், ராமதாசின் மகளும் பசுமை தாயகம் தலைவருமான செளம்யா அன்புமணி , விவசாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Friday, October 16, 2009

மகிந்தவின் தேர்லுக்கு வலுச்சேர்க்கும் உள்நோக்கமே-இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம்

இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை. இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பணிகள்தான் தமிழர்களை மீண்டும் அவர்களின் இடத்திற்கு குடியேற்றுவதற்கு தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிப்பகுதி நெடுகிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது?

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை? இந்தியாவிடம் ஏன் கேட்கவில்லை?

இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை. இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது.

என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, October 6, 2009

ஜெயலலிதா மீது ராமதாஸ் சரமாரி தாக்கு

நாகர்கோவில்: சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டது, அதிமுக தொண்டர்கள் விலை போகிறார்கள், ஜெயலலிதாவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சரமாரியாக தாக்குதலும் தொடுத்தார் ராமதாஸ்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பாமக வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2வது குற்றவாளியாக எனது மகனும், 3வது, 4வது, 5வது குற்றவாளிகளாக எனது பேரன் மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி தன்ராஜும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

அதிமுக பலவீனமாகிவிட்டது:

2001ம் ஆண்டுக்கு முன்னர் அதிமுக, தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாகிகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

விலை போகும் அதிமுக தொண்டர்கள்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டிவிடும்.

ஜெவுக்கு தலைமை பண்பு இல்லை:

இப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. நாடாளுமனறத் தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது:

ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்:

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

3-வது அணி...:

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை . இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது என்றார் ராமதாஸ்.

ஜெயலலிதா மீது ராமதாஸ் சரமாரி தாக்கு

நாகர்கோவில்: சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டது, அதிமுக தொண்டர்கள் விலை போகிறார்கள், ஜெயலலிதாவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சரமாரியாக தாக்குதலும் தொடுத்தார் ராமதாஸ்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பாமக வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2வது குற்றவாளியாக எனது மகனும், 3வது, 4வது, 5வது குற்றவாளிகளாக எனது பேரன் மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி தன்ராஜும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

அதிமுக பலவீனமாகிவிட்டது:

2001ம் ஆண்டுக்கு முன்னர் அதிமுக, தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாகிகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

விலை போகும் அதிமுக தொண்டர்கள்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டிவிடும்.

ஜெவுக்கு தலைமை பண்பு இல்லை:

இப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. நாடாளுமனறத் தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது:

ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்:

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

3-வது அணி...:

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை . இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது என்றார் ராமதாஸ்.

Sunday, October 4, 2009

அதிமுக தொடர்ந்த வழக்கால் கோபம் - கூட்டணியை முறித்தது பாமக!

தைலாபுரம்: கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தற்போது அக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தடுத்து நிறுத்த ஜெயலலிதா தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணியில் சேருவதா, அதிமுகவுடன் புதுக் கூட்டணி அமைப்பதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தது பாமக. இதையடுத்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில், வாக்கெடுப்பு நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அதில் பெருவாரியான ஆதரவு அதிமுகவுடன் சேர வேண்டும் என்று இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார்.

அப்போதே அதிமுகவுடன் சேருவது குறித்து டாக்டர் அன்புமணி உள்ளிட்ட சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக தெரிகிறது. இருந்தாலும் வம்படியாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது பாமக. தங்களது கோட்டை என்று அது கூறி வந்த தொகுதிகளிலேயே மோசமான தோல்வியைத் தழுவியதால், பாமகவின் அஸ்திவாரம் ஆடிப் போய் காணப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தோல்வியோடு ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து தனது கட்சித் தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை (அது கூட முழுமையாக இல்லை) நடத்திய அவர், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர்-ராமதாஸ் உள்பட, ஜெயலலிதாவை சந்திக்க விரும்பியும் கூட அவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் அப்செட்டாகவே இருந்தார்.

இருந்தாலும் முன்பு போல தடாலடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற முடியாத நிலையில் கட்சி இருப்பதால், பொறுமை காத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த டாக்டர் ராமதாஸ், இக்கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடருவதா, இல்லையா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக கூட்டணியை விட்டு பாமக விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதற்கேற்ப இன்றைய கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணியை முடித்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அதிமுக உறவை முறித்துக் கொள்வதற்கான காரணத்தை விளக்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொலை வழக்கில் ராமதாஸ் குடும்பத்தினர்...

அதில் கூறப்பட்டிருப்பதாவது...

2006ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பரசுராமன் (ராமதாஸின் மருமகன்), சீனிவாசன் (சகோதரர்) மற்றும் சீனிவாசனின் பேரன் உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கியஸ்தருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி சி.வி.சண்முகம் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் நேரடியாக கொடநாடு சென்று அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து முறையிட்டனர். அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அது வாபஸ் பெறப்படவில்லை. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர், முன்னாள் அமைச்சரின் செயலால் அசாதாரண நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரது செயல் கடுமையான கண்டனத்துக்குரியதாக மாறியுள்ளது.

இதற்கு மேலும் அதிமுகவுடன் தோழமை உறவை தொடர முடியாது என்று பாமக செயற்குழு கருதுகிறது. மேலும், அந்தக் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் செயற்குழு கருதுகிறது.

இனியும் ஒரு நிமிடம் கூட இந்த உறவு நீடிக்கக் கூடாது என்று அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக கருதுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டாக்டர் ராமதாஸ்.

2வது முறையாக விலகிய பாமக...

அதிமுகவுடனான உறவை பாமக முறித்துக் கொள்வது இது 2வது முறையாகும். கடந்த 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் போகப் போக திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததால், கடுப்பான திமுக, பாமகவை கூட்டணியை விட்டு நீக்கியது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

பாமகவுக்கு புதுச்சேரி உள்பட ஏழு சீட்களை ஒதுக்கியது அதிமுக. ஆனால் ஏழிலும் பாமக தோல்வியைத் தழுவியது.

மதிமுக மட்டுமே பாக்கி...

ஏற்கனவே சட்டசபை இடைத் தேர்தலுடன் அதிமுகவுடனான 'நல்லுறவிலிருந்து' விலகி விட்டன இடதுசாரி கட்சிகள் இரண்டும். தற்போது பாமகவும் போய் விட்டது. இந்த நிலையில் மிஞ்சியிருப்பது மதிமுக மட்டுமே.

இதனால் அதிமுக நிலவரம் பெரும் கலவரமாகியுள்ளது.

ராமதாஸை சந்தித்த நெடுமாறன்

முன்னதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

தஞ்சையிலிருந்து செங்கல்பட்டு வந்த அவர் வழியில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸை சந்தித்து பேசினார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

Saturday, October 3, 2009

அதிமுக உறவு குறித்து நிர்வாகக் குழு முடிவெடுக்கும்- ராமதாஸ்

சென்னை: அதிமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பாக தமிழ்நாட்டில் உழவர்களுக்கான கொள்கை அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

ஜெ.வுடன் போனில் பேசினேன்...

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வதா என்பது குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள், நிலைப்பாடுகள் குறித்தும் பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து பல்வேறு ஏடுகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் வெற்றி பெற்றதால் அவர்கள் தங்களது எம்பிக்களை அறிமுகம் செய்துவைக்க ஜெயலலிதாவை சந்தித்தார்கள். எங்கள் கட்சியின் சார்பில் யாரும் வெற்றி பெறாததால் நாங்கள் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதனை வைத்து ஜெயலலிதா என்னை சந்திக்க மறுப்பதாக தொடர்ந்து பொய்ச்செய்திகள் வெளியிடப்படுகின்றன. தயவு செய்து யாரும் இதுபோன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்ததும் நானும், ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

ஜெயராம் ரமேஷிடம் கருணாநிதி பேசட்டும்...

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது தொடர்பான ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுள்ளார்.

அவர் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேட்டு இதற்கான விவரங்களை அறியலாம். அல்லது மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு நம்மிடம் ஆதாரம் கேட்கிறார் கருணாநிதி. பல்வேறு ஊடகங்களில் இதற்கான அனுமதி அளித்து ஜெயராம் ரமேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில், தமிழக அரசு இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வேவு பார்க்கும் இலங்கை தூதர்...

கச்சத்தீவு தொடர்பாக தமிழகத்தில் உள்ள இலங்கை துணைத் தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுப்பதற்கு கருணா, பிள்ளையான் இருப்பது போல இங்கு அவர்களின் பிரதிநிதியாக வேவு பார்ப்பதற்கு இலங்கை துணைத் தூதர் தேவையில்லை. அவரை மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் வெளியேற்ற மாட்டார்கள்.

தமிழர் உள்ளங்கள் கனன்று கொண்டிருக்கிறது...

டெல்லியில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும். அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான கோபம் எரிமலையாக கனன்று கொண்டு இருக்கிறது.

நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது. அந்த இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: