Thursday, December 30, 2010

சென்னையைச் சுற்றி 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை சென்னையுடன் சேர்ப்பதற்குப் பதில் திருவொற்றியூர், தாம்பரம், அம்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றை சென்னையுடன் போட்டியிடச் செய்து வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை புறநகர்ப் பகுதிகளை சென்னை மாநகராட்சியில் இணைப்பதன் மூலம் 9 நகரமன்றத் தலைவர்களும் 200க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும் உட்பட மொத்தம் 800க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை சென்னை மாநகராட்சியின் வெறும் 93 கவுன்சிலர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் அதன் வேலைப்பளு அதிகரிக்கும். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.

சென்னையில் மழைநீரை அகற்றுவதற்கு முறையான வடிகால்கள் இல்லை. பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகள் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த குறைகளை எல்லாம் நீக்கி என்றைக்கு சென்னை மாநகரம் அடிப்படைத் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்கிறதோ அன்றைக்கு நகருக்கு அருகில் மற்றும் தொடர்ச்சியாக உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இத்தகைய வசதிகளை செய்து கொடுக்க அவற்றை மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

ஆனால், பெருநகர தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை சென்னை மாநகரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பகுதிகளையும் அதனுடன் இணைப்பதில் என்ன பெருமை உள்ளது? மக்களின் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப் பிடித்தால் அதில்தான் பெருமை இருக்கிறது.

எனவே, சென்னை மாநகராட்சியுடன் கூடுதல் பகுதிகளை இணைப்பதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

அதற்குப் பதிலாக அம்பத்தூர் சென்னை, திருவொற்றியூர் சென்னை, தாம்பரம் சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி அவற்றில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளை இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 29, 2010

தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல:ராமதாஸ்

திருவள்ளூர்: தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழக மக்கள் தொகையில் இரண்டரை கோடி பேர் வன்னியர்கள். அவர்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க அரும்பாடுபட வேண்டும்.

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணியே இல்லாமல் தனித்து நிற்பதும் நம் கட்சிக்கு ஒன்றும் புதிதன்று.

ஏற்கனவே, கடநத 81, 91, 96 தேர்தல்களில் தனித்து நின்றோம். முதல் முறை 1 எம்.எல்.ஏவும், 2வது முறை 4 எம்எல்ஏவும் பெற்ற நாம் தற்போது 100 எம்எல்ஏக்களை பெற வேண்டும். இதற்கு இளைஞர்கள் வரும் ஜனவரி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களி்ல் வன்னியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபோதிலும் பாமக வலுவான நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களில் இருக்கும் வன்னியர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் நம் பக்கம் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

Tuesday, December 28, 2010

ஜனவரி 2ல் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தைலாபுரத்தில் இந்தப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும்.

2010ம் ஆண்டில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். 2011ம் ஆண்டுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

கட்சியின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் கூட்டத்தில் உரையாற்றுவர் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, December 15, 2010

எம்பிபிஎஸ் சேர்க்கை: பொது நுழைவுத் தேர்வு-ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் உத்தரவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும், இந்திய மருத்துவ கவுன்சில் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் இனி தமிழக மாணவர்கள் சேர விரும்பினால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவை தமிழகத்தின் மீது கட்டாயமாக திணிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த முடியாத ஆபத்து ஏற்படப் போகிறது.

சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் எதிரான இந்த கொள்கைத் திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு என்ற இந்த கொள்கை திணிப்பை தமிழக தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும், வெற்றி காண வேண்டும்.

முதல்வர் கருணாநிதி, ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதி, பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடு இந்த ஆபத்து நுழைய போகிறது.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்து, தடையாணை பெற வேண்டும். அத்துடன் பிரதமர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய சுகாதாரத் துறையின் மூலம் தலையிடச் செய்து, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மையை எடுத்துக் கூறி, பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

முன்பு அன்புமணி இத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவை தற்காலிகமாக தடுத்து வைத்திருந்தார். இப்போது அதை நிரந்தரமாக தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நமது கிராமப்புற மாணவர்கள், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர் போன்ற நகரங்களின் மாணவர்களோடு போட்டி போட முடியாமல், மருத்துவம் மற்றும் மருத்துவ முதுகலை வகுப்புகளில் சேரமுடியாத பேராபத்து ஏற்பட்டுவிடும்.

இந்த ஆபத்தை தடுக்க முதல்வர் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 32,000 மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் 13,000 உயர் நிலை மருத்துவப் படிப்புகளுக்கும் இனிமேல் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 11, 2010

வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சேலம்: வேளாண்மைத்துறை அமைச்சருடன் மோதல் போக்கில் இருந்து வரும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று அவரை சந்தித்துப் பேசினார்.

ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் தண்ணீரை சேலம் மாவட்ட பாசனத்திற்கு முறையாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரவே சந்தித்ததாக விளக்கினார் ஜி.கே.மணி.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக எம்.எல்.ஏக்கள் தமிழரசு, காவேரி, கண்ணையன் ஆகியோர் தொடர்ந்து வீரபாண்டியாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருபவர்கள். வீரபாண்டி ஆறுமுகத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களது கடுமையான திமுக விரோதப் போக்கு காரணமாகவே கட்சித் தலைமையால் திமுக கூட்டணியுடன் நெருங்கிப் போகமுடியாத நிலை முன்பு இருந்தது.

இந்தநிலையில், இந்த மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்தார். அப்போது அதிகாரிகளுடன் மாவட்ட திட்டப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தார் வீரபாண்டியார்.

பின்னர் அமைச்சருடன் பாமக குழுவினர் தனியாக சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசினர். என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. என்ன பேசினீர்கள் என்று பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான். தேர்தல் கூட்டணி பற்றி தி.மு.க. தலைமை முடிவு எடுக்கும். தி.மு.க. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவன் நான் என்றார்.

ஜி.கே.மணியோ வித்தியாசமான பதிலைக் கூறினார். அவர் கூறுகையில், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வீணாகாமல் தடுப்பதற்காக சேலம் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் பாசனத்திற்கு திருப்பி விட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார்.

ஆனால் சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்களை, வீரபாண்டி ஆறுமுகத்திடம் சமாதானமாகப் போகுமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியதால்தான், மணியே அவர்களை நேரில் கூட்டிக் கொண்டு போய் வீரபாண்டியாரை சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க உதவுமாறும் வீரபாண்டியாரிடம் வேண்டுதலுடன் கூடிய கோரிக்கையை பாமக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. வீரபாண்டி ஆறுமுகமும் பாமக மீது தனது பாசத்தையும், பரிவையும் காட்டியதாகவும், இதன் மூலம் பாமக மீண்டும் திமுக கூட்டணிக்குத் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Thursday, December 2, 2010

உயர் நீதிமன்றத்தில் 5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 10 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது குறைந்தபட்சம் 5 வன்னியர்களையாவது நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் ஒரு நீதிபதி, மிக விரைவிலேயே ஓய்வுபெற இருப்பதால் காலியிடங்கள் பத்தாக உயரும். இந்த காலி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும்போது இதுவரையில் போதிய அளவிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாத வகுப்பினருக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்போது பணியில் உள்ள 51 நீதிபதிகளில் ஒரேயொருவர் மட்டும்தான் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

மாநிலத்தின் இதர முக்கியப் பிரிவினர் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்குள்ள வன்னியர் வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களை, அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் கெளரவமான எண்ணிக்கையில் கூட நீதிபதிகளாக நியமிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்திருப்பது அந்த மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பிய பின்னர் அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட இருப்பதுதான் இதற்குக் காரணம்.

எனவே இப்போது காலியாகவுள்ள 10 நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பெயர்களை பரிந்துரை செய்யும் போது வன்னியர் வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள வழக்கறிஞர்களை தேர்வுக் குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றத்திலும், இதர நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களாகவும், அரசு தரப்பு வழக்குகளில் வாதாடும் குழுக்களிலும் மற்றும் அரசு பொது நிறுவனங்களிலும் பணியாற்றி அனுபவமுள்ள இந்தச் சமூக வழக்கறிஞர்கள் அதிகமாகவே உள்ளனர். அவர்களிலிருந்து குறைந்தபட்சம் 5 பேரையாவது புதிய நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

அதன்மூலம் இச்சமூகத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை துடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Wednesday, December 1, 2010

யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை : அன்புமணி பேச்சு

மேட்டூர்:""வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் தேவையில்லை,'' என, மாஜி மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.



எடப்பாடி சட்டசபை தொகுதி இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஜலகண்டபுரத்தில் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாஜி மத்திய சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.,மணி, எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தமிழரசு, கன்னையன் முன்னிலை வகித்தனர்.



ஜி.கே.,மணி பேசுகையில், ""இளைஞர், இளம் பெண்களுக்கான 21வது முகாம் எடப்பாடி தொகுதியில் நடக்கிறது. இதர கட்சியினர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என யோசித்து கொண்டிக்கும் நேரத்தில் அடுத்த தலைமுறையினர் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் மட்டுமே முகாம் நடத்துகிறார்,'' என்றார்.



அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் வன்னியர்கள்தான் அதிக அளவில் குடிசையில் வசிக்கின்றனர். ஆடு,மாடு மேய்க்கின்றனர். வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடியது பா.ம.க., மாற்று கட்சி வன்னியர்களும் தற்போது பலனை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் வன்னியர்களுக்கு என தனியாக போராட முடியாது. வன்னியருக்காக போராடும் கட்சி பா.ம.க., மட்டுமே.



அண்டை மாநிலங்களில் மெஜாரிட்டி இனத்தை சேர்ந்தவர்கள்தான் முதலவராகின்றனர். தமிழகத்தில் மட்டுமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் முதல்ராகும் அவலம் உள்ளது. இலவசங்களாலும், மதுகடைகளாலும் மக்கள் சீரழிகின்றனர். தமிழகத்தில் மது அருந்துபவர்களின் சராசரி வயது 28 ஆக இருந்தது. தற்போது இந்த வயது 13 ஆக குறைந்து விட்டதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.தமிழகத்தில் இரண்டரை கோடி, ஆந்திராவில் 90 லட்சம், கர்நாடகாவில் 70 லட்சம், கேரளாவில் 40 லட்சம், புதுச்சேரியில் 8 லட்சம், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சம் என உலகம் முழுவதும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எடப்பாடியில் 2.34 லட்சம் வாக்காளர் உள்ளனர்.



இதில், வன்னியர் மட்டும் 1.50 லட்சம் பேர். வன்னியர்கள் மட்டும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் யாருடைய தயவும் நமக்கு தேவையில்லை. எனவே, பா.ம.க., வினர் தி.மு.க., உள்பட மாற்று கட்சியில் உள்ள வன்னியர் அனைவரையும் நமது கட்சியில் இணைக்க வேண்டும்.பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கும், இரண்டாவது கையெழுத்து ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதுதான். நாம் கூட்டணி சேர மாட்டோமா என பிற கட்சியினர் துடித்து கொண்டிருக்கின்றனர், என்றார்.



ராமதாஸ் பேசுகையில், ""குடிக்கும் மக்களை அல்ல. நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க,வின் நோக்கம். குடிக்க கூடாது. வரதட்சணை வாங்க கூடாது என்பதே பா.ம.க., இளைஞர், இளம்பெண்கள் எடுத்து கொள்ளும் உறுதிமொழியாகும்,'' என்றார்.

Monday, November 29, 2010

கருணாநிதியுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை இச் சந்தித்து நடந்தது.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மணி,
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை கிடைக்கச் செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும். இதை காலம் தாழ்த்தாமல் எடுக்க மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலம் தாழ்த்தினால் தமிழக அரசே விரைவாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

இதுதவிர உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. குறிப்பாக வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டும் உள்ளார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

பாமகவின் இந்தக் கோரிக்கைகளை முதல்வர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். அவருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்று கேட்டதற்கு, இன்றைய சந்திப்பின்போது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை என்றார்.

இருப்பினும் கூட்டணி விஷயமாகவும் இருவரும் பேசியதாகவும் தெரிகிறது.

Sunday, November 14, 2010

பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது

விழுப்புரம்: தமிழகத்தில் வன்னியர்கள் இரண்டரை கோடி பேர் இருந்தும் என் பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வர முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், "விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒண்ணேகால் லட்சம் பேர் வன்னிய சமூத்தினர். இதில் 60 ஆயிரம் பேர் நம்முடைய வேட்பாளருக்கு வாக்களித்தாலே போதும். நாம்தான் ஜெயிப்போம். மாவட்டம் முழுவதிலும் உள்ள 11 தொகுதிகளிலும் வன்னியர்கள் மாம்பழத்திற்கு ஓட்டுப் போட்டார்களேயானால் 11 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்!

அதேபோல் தமிழகம் முழுவதும் வன்னியர்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதியில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவை. அப்போது யாராவது தானாகவே முன்வந்து ஆதரவு கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்.

என் பேச்சை கேட்கவில்லையே...

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இனத்தின் மாயாவதி 5-வது முறையாக முதல்வராக பணியாற்றி வருகின்றார். அங்கு 20 முதல் 27 சதவீதம்தான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இங்கு நாம் 2 1/2 கோடி பேர் வன்னியர்கள் இருந்தும் நாம் ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் எனது பேச்சை யாரும் கேட்பதில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளோம்.

நீங்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் நான் ஏன் ஜெயலலிதாவின் தோட்டத்திற்கும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கும் செல்கின்றேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான சட்ட திருத்தத்தில் முதல் கையெழுத்தையிடுவோம். ஒரு தடவை பா.ம.க.விற்கு வாய்ப்பு கொடுத்தால் பின்னர் ஆட்சியை பார்த்து தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை இருக்க செய்வீர்கள். பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது..." என்றார்

Wednesday, November 3, 2010

பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்-ராமதாஸ்

திருவள்ளூர்: பாமக தொண்டர்கள் கூட்டணி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

திருவள்ளூரில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், பாமக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும் கலக்கத்திலும் உள்ளனர்.

எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும்.

தற்போது இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். சினிமா வாழ்க்கை அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு என்பதை அவர்கள் உணர வேண்டும். சினிமா நடிகர்களை விட்டுவிட்டு சமுதாயத்துக்காக போராட வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பாமகவை தோற்கடித்தனர். ஆனால் எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்-ராமதாஸ்:

கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தினர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஒதுக்கீடு மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும், 15,000 பேர் பொறியியல் படிப்பிலும் சேர்ந்து வருகின்றனர்.

இந்த இட ஒதுக்கீட்டைப் பெற பாமக நடத்திய போராட்டங்கள், தியாகங்களை இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். போராட்டத்தில் இறந்த 21 மாணவர்களின் தியாகங்களையும் நினைவு கூற வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தமிழகத்தில் 15 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் என்று பாமகவில் இணைகிறார்களோ அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்றார்.

கூட்டணி குறித்து கவலை வேண்டாம் என்றும், தேர்தலுக்குப் பின்னரே மது ஒழிப்புப் போராட்டம் என்றும் பாமக அறிவித்துள்ளதன் மூலம் திமுகவுடன் கூட்டணிக்கு அந்தக் கட்சி தயாராகிவிட்டதாகவே தெரிகிறது

Tuesday, November 2, 2010

போக்குவரத்து தொழிலாளர்களை கருணாநிதி அரசு ஊழியராக்குவார்: ராமதாஸ்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களை முதல்வர் கருணாநிதி அரசு ஊழியராக்குவார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,

அரசு ஊழியர் என்பது ஒரு கெளரவம். அதற்காகவே, தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை.

நான் ஒரு போராளி என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க நான் போராடவும் தயங்க மாட்டேன்.

எனினும், முதல்வர் கருணாநிதி அத்தகைய சூழலை ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.

Wednesday, October 27, 2010

சட்டத்தின் 'சந்து பொந்துகளில்' புகும் இடஒதுக்கீட்டின் எதிரிகள்: ராமதாஸ்

சென்னை: இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்தித்து வருகின்றனர். இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்தி மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்ற நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இந்த இடஒதுக்கீட்டுச் சலுகையை மேலும் ஓராண்டு காலத்திற்கு மட்டும் நீட்டித்து கடந்த ஜுலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

அத்துடன் இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக் கூடிய தெளிவான புள்ளி விவரங்களை தயாரித்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மறு ஆய்வு செய்யலாம் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை மேலும் அதிகரித்து புதிதாக சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அனுமதியின்படி நமது மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்வதற்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.

அதற்காக மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

ஆனால் இன்று வரையில் அத்தகைய ஆணை வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்திப்பார்கள்.

இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதன் மூலம் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்து புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.

இந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யத் தவறினால் `முதலுக்கே ஆபத்து' என்பதைப் போல இருக்கின்ற 69 சதவீத சலுகைக்கே ஆபத்து வந்து விடும் என்று கூறியுள்ளார்

Tuesday, October 26, 2010

யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம்-டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம்: நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். அதில் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

திண்டிவனம் அருகே உள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் பாமக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்

தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

Monday, October 25, 2010

அன்புமணி தலைமையில் வன்னியர் ஆட்சியை அமைக்க வேண்டும்-ராமதாஸ்

மேட்டூர்: இரண்டரை கோடி வன்னியர்களைக் கொண்டுள்ளோம். இவர்களின் துணையுடன் அன்புமணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மேட்டூரில் நடந்த பாமக இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில்தான் இவ்வாறு பேசினார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,

இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். டிவியில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.

தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.

இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. போராட்டம், இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும் என்றார் ராமதாஸ்

Sunday, October 24, 2010

எனக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி பிடித்திருக்கிறது-அன்புமணி

மேட்டூர்: எனக்கு வெறி பிடித்திருக்கிறது. அது, பா.ம.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியை பிடித்தால் மட்டுமே என் வெறி அடங்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

மேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில்,

கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நடிகர்கள் டூப் போட்டு சண்டை போடுகின்றனர். அவர்கள் உண்மையான வீரர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும்.

கிராமங்களில் பிற கட்சிகளில் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களை நமது கட்சியில் இணைக்க வேண்டும். கிராமங்களில் பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது.

நான் ஒன்றரை மாதத்தில் மீண்டும் கிராமங்களுக்கு வருவேன். அப்போது, கட்சிக்காக பாடுபட்ட பழைய நிர்வாகிகளுக்கு சால்வை போர்த்த வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் பா.ம.க.வில் இணைக்க வேண்டும். அதற்கு கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்.

மத்தியில் இருந்த 80 அமைச்சர்களில், உலக அளவில் மூன்று விருது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எனக்கு மட்டுமே கிடைத்தது.

தமிழகத்தில் 15 ஆண்டுக்கு முன் 8 கோடி லிட்டர் சாராயம் குடித்தனர். தற்போது 36 கோடி லிட்டர் சாராயம் குடிக்கின்றனர். மது குடித்தே 25 வயதிற்குள் இறந்து போகின்றனர். இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகக் கூடாது. மத்திய சுகாதார அமைச்சராக இருந்து 110 கோடி பேருக்கு திட்டங்கள் வகுத்த என்னால், தமிழகத்தில் 6.5 கோடி மக்களுக்கு எளிதாக திட்டங்கள் வகுக்க முடியும்.

எனக்கு வெறி பிடித்திருக்கிறது. அது, பா.ம.க., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறி. இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ள தமிழகத்தில் பா.ம.க., ஆட்சியை பிடித்தால் மட்டுமே என் வெறி அடங்கும். சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். பா.ம.க. தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் அவர்.

Thursday, October 21, 2010

பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு! - ராமதாஸ்

சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், என பாமக நிறுவனர் டாக்டரக் ராமதால் கூறினார்.

மதுராந்தகம் தொகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் பா.ம.க. சார்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இந்தியாவில் பணக்காரர்களில் முதலிடம் அம்பானி. 234 தொகுதிகளிலும் அவர் கை காட்டும் ஆள் ஜொயிக்க முடியும். அம்பானி சொல்லும் நபர் முதல்வர் ஆக முடியும்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான். தமிழகத்தில் மதுவை ஒழிப்பதுதான் அனைத்து சீரழிவுக்கும் வைக்கப்படும் முற்றுப்புள்ளி.

சமச்சீர் கல்வி கட்டணம் ஒரே கல்வி அனை வருக்கும்சம கல்வி. ஆகவே இளைஞர்கள், இளம் பெண்கள் பா.ம.க.வில் சேர்ந்தால் பா.ம.க. கட்சி நிச்சயம் வெற்றி பெறும்..." என்றார்.

அன்புமணி சிறந்த அமைச்சராக செயல்பட்டார்-பர்னாலா புகழாரம்

திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சிறந்த அமைச்சர் என்பதை நிரூபித்தார் என்று தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா புகழாரம் சூட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனரான, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அவரது மனைவி சரஸ்வரதி ராமதாஸ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரியை பர்னாலா திறந்து வைத்தார்.

பின்னர் பர்னாலா பேசுகையில்,கல்வி மற்றும் சமுதாய புரட்சியை ஏற்படுத்துவதற்காக வன்னியர் கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ள டாக்டர் ராமதாசை பாராட்டுகிறேன்.

கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பதன் மூலம் சமுதாய மாற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வர முயலும்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டது. அவர் ஒரு மிகச் சிறந்த அமைச்சர் என்பதையே காட்டுகிறது என்றார்

Wednesday, October 13, 2010

கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியலில் எதுவும் நடக்கலாம்-ராமதாஸ்

சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதியை இன்று ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

அவருடன் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் மற்றும் முஸ்லீம், கிருஸ்துவர், உள்பட 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவருடன் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள 27 சமுதாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் முதல்வரை சந்தித்தேன். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படி, எந்த வழிமுறைகளில், எந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து எங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக பேசிய முதல்வர், இதில் தனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்துவிட்டு, உடனடியாக தமிழக பிற்படுத்தப்பட்ட நல ஆணையர் நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் என்றார் ராமதாஸ்.

கேள்வி: இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தான் தமிழகத்திலும் நடத்த முடியும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தாரே?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேசிய அளவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். தனியாக ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்ப முடியாது. பாதியில் கூட அவர்கள் இதை கைவிட்டு விடலாம்.

மேலும் அந்த கணக்கெடுப்பு சமுக, பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்காது. ஆனால், அப்படிப்பட்ட கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். வெறும் தலைகளை எண்ணும் கணக்கெடுப்பால் பலன் இல்லை என்று தேசிய அளவில் சமுக ஆர்வலர்களும் கூறியிருப்பதையும் முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: இதற்கு கலெக்கெடு எதுவும் நிர்ணயித்திருக்கிறீர்களா?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு ஜனவரிக்குள், அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம். நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: திமுக-பாமக இடையே மீண்டும் கூட்டணி உருவாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளனவே?

ராமதாஸ்: பத்திரிக்கைகளில் தான் அப்படி செய்திகள் வருகின்றன. இன்று நாங்கள் அது பற்றி எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு அதற்காகவும் அல்ல. மிகவும் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை அளிப்பதற்காக நடைபெற்ற சந்திப்பு இது.

கேள்வி: கூட்டணி தொடர்பாக மீண்டும் முதல்வரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டா?

ராமதாஸ்: அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், இன்று நடைபெற்ற சந்திப்பு அதற்காக அல்ல என்றார் ராமதாஸ்.

இதற்கு முன் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆன்மிகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் ராமதாஸ்.

அவரது கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 12, 2010

கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்-'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது!

சென்னை: திமுக, அதிமுக இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறி சில நாட்களே ஆன நிலையில் தற்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். ஆனால் ஜெயலலிதாவை சந்திக்க காத்துக் கிடக்க வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் தனது பேட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் கூறியது உண்மை என்று நிரூபிப்பதைப் போல இப்போது டாக்டர் ராமதாஸ் சந்திக்க நேரம் வேண்டும் என்று கேட்டவுடன் முதல்வர் கருணாநிதி நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம்.

திமுக கூட்டணியை விட்டு துரத்தப்பட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ், முதல்வரை சந்திக்கப் போவது இதுவே முதல் முறை என்பதால் இது என்ன மாதிரியான சந்திப்பு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தர திமுக இழுத்தடித்து கழுத்தறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்த டாக்டர் ராமதாஸ் திமுகவையும், திமுக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேசமயம், திமுக தரப்புடன் மறைமுகமாக உறவு வைத்துக் கொள்ளவும் தீவிரமாக முயன்று வந்தார். அதேபோல அதிமுக பக்கமும் நூல் விட்டு வந்தார். ஆனால் இரு தரப்பிலுமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன நிலையில் உள்ளார் ராமதாஸ்.

இந்தநிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை சாக்காக வைத்து முதல்வரை சந்தித்துப் பேச தீவிரமாக முயன்று வந்தார். தற்போது அவரது கடும் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. ராமதாஸ் சந்திக்க முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளாராம்.

நாளை அல்லது நாளை மறுதினம் முதல்வரை ராமதாஸ் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைக்கவுள்ளார் என்று தெரிகிறது. அதேசமயம், கூட்டணி குறித்தும் ராமதாஸ் பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Friday, October 1, 2010

காங்கிரஸ்-தேமுதிக-பாமக கூட்டணிக்குத் தயார்: ராமதாஸ்

சென்னை: காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புக்கள் இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையி்ல்,

காங்கிரஸ் தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது அபிப்ராயம் மட்டுமல்ல. சில மூத்த காங்கிரஸ்காரர்களின் கருத்தும் அதுதான். காங்கிரஸ், விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக மூன்றும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சிதான் எடுக்க வேண்டும்.

என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் பேசும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தோள்களில் ஏறி தேர்தல் திருவிழாவை பார்க்கிறோம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் முயற்சி எடுத்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.

தனியாக நிற்கும் சூழல் வந்தால் அதற்கும் பாமக தயார். எங்கள் கட்சிக்கு செல்வாக்கான 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றார்.

குடிகார நாடாகும் தமிழ்நாடு:

முன்னதாக தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழ்நாடு குடிகார நாடாக மாறப் போகிறது.

பாமக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கிற்கே முதல் கையெழுத்து. ஒரு சொட்டு சாராயம் கூட தமிழத்த்தில் இருக்காது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு சிக்கல்கள் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆட்சி செய்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்காததே காரணம்.

5 ஆண்டு பதவியில் நீடித்தாலே போதும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்றார்.

Tuesday, September 28, 2010

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநில அளவில் மறியல் போராட்டம் -ராமதாஸ்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ராமதாஸ் பேசுகையில்,

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு வருடத்துக்குள் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியாக எடுக்கப்படும் கணக்கின்படி ஒவ்வொரு சாதியிலும் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. 40க்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்திக்க அணுகி உள்ளோம். உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் மீண்டும் அனைத்து சமூக அமைப்புகளும் கூடி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.

ராஜபாளையத்தில் பொதுக்குழு கூட்டம் :

இதற்கிடையே வரும் 30ம் தேதி பாமகவின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.

Thursday, September 23, 2010

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை மறைக்க முயலும் கூட்டம்-ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 69 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று நினைக்கும் கூட்டம் தான், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம், பின்னர் தனியாக நடத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு இந்தக் கூட்டத்தின் சூழ்ச்சி தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்த அனைத்து சாதி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், கொங்கு முன்னேற்ற கழகம் வி.ஆர்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நாடார் பேரவை செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், அகில இந்திய தேவர் பேரவை நிறுவனர் வி.ராமகிருஷ்ணன், நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்பட 38 சமுதாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

1931க்குப் பிறகு ஆதிக்கம் செலுத்திய கூட்டம் (முற்பட்ட சாதியினர்) சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்திவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து விடும் என்று அந்தக் கூட்டத்தினர் கூறும் காரணம் உண்மையல்ல. இதர பிற்பட்டோர் 69 சதவீதத்திற்கு மேல் இருக்கும் உண்மை தெரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் சூழ்ச்சி செய்து நிறுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மாட்டோம், பின்னர் தனியாக எடுப்போம் என்று கூறிவிட்டது. இதில் தான் சூழ்ச்சி உள்ளது.

இந்த கணக்கெடுப்பை நடத்த ரூ.2,500 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதை நடத்தினால் அவ்வளவு கோடிகள் தேவைப்படாது.

தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஆதிக்க சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு நிறுத்தி விடுவார்கள்.

இதனால் இப்போது எடுக்கும் கணக்கெடுப்பிலேயே சாதி- ஓபிசி, சாதி பிரிவு என்ன? என்று போட்டுவிட்டாலே போதும். ஆனால், நம்மை ஏமாற்ற நினைக்கிறார்கள். தனியாக எடுக்கும் கணக்கெடுப்பிலும் தலையை மட்டும் எண்ணுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சமூக பொருளாதார நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சமுதாயத்தினருக்கும் பொருளாதார நிலைகளுடன் கூடிய சாதிவாரி கணக்கு அரசிடம் இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்தாமல் தனியாக நடத்துவது என்று அறிவித்துள்ள முடிவை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதோடு சமூகப் பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளிவிவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால் தான் உரிய பலன் விளையும் என்று அறிஞர்கள் தெரிவித்துவரும் கருத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு இந்த பணியை மேற்கொள்ளும் வரை காத்திருக்காமல், தமிழகத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள்ளாக, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழு விவரங்களோடு கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். அதற்கான உத்தரவை தமிழக அரசு காலதாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பேசிய டாக்டர் ராமதாஸ், இந்த முடிவை தமிழக அரசு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தந்தை பெரியாரிடம் பாடம் படித்த முதல்வர் கருணாநிதி சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர். எனவே உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்த மாதம் 11ம் தேதி முதல்வரை அனைத்து சமுதாய தலைவர்களும் சந்தித்து வலியுறுத்துவோம்.

அதன் பின்னரும் இதுபற்றி அறிவிப்பு வரவில்லை என்றால் அக்டோபர் 21ம் தேதி அனைத்து சமுதாய சங்கத்தினரும் இணைந்து சென்னையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஓட்டு போட காசு வாங்காதீர்கள்: ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி: தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர்,

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 1980ல் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 5,000 பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு கூட நடைபெற்ற அந்த போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்டவர்கள் சிறை சென்றனர். அந்த வகையில் பா.ம.க. வரலாற்றில் கும்மிடிப்பூண்டி மறக்க முடியாத இடம்.

நாம் 2011ல் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்றால் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆட்சி நடத்தும் கட்சிகளின் நோக்கம் எல்லோரும் குடிக்க வேண்டும் என்பது தான்.

டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் பள்ளிக்கூட மாணவர்களும் மது குடிக்கிறார்கள். இன்னும் 5 வருடத்தில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலைமை உருவாகப் போகிறது.

2011ல் தமிழ்நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவசாயம், கிராம வளர்ச்சி, இளைஞர்களின் மறுமலர்ச்சி, தமிழ் வளர்ச்சி இவற்றுக்கு எல்லாம் பாமகதிட்டம் போட்டிருக்கிறது. அதனை வல்லுனர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதை நிறைவேற்ற பாமக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். மதுக்கடை வேண்டாம் என்று கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நான்தான் கேட்டு வருகிறேன்.

நாட்டில் பல்வேறு புரட்சிகள் இருந்தது. தற்போது சாராய புரட்சி, ரியல் எஸ்டேட் புரட்சி நடக்கிறது.

ஆட்சி நடத்தியவர்கள், ஓட்டுப் போடும் ஜாதியாக மட்டுமே வன்னிய ஜாதியை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது. பாமக அரசியல் திட்டமே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை என்பது தான் என்றார் ராமதாஸ்.

Wednesday, September 22, 2010

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'': இதுதான் நமது தாரக மந்திரம்-ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி & சேத்தியாதோப்பு: நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கும்மிடிப்பூண்டியில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நிறைவு நாளில் அவர் பேசுகையில்,

ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனம க்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும்.

சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.

வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் தான்.

பாமக ஆட்சிக்கு வந்தால் அவை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'':

முன்னதாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் திருமண விழாவில் பேசிய ராமதாஸ்,

வன்னியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள கல்விக் கோவிலில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி துவங்கப்படும். வன்னியர் பிள்ளைகள் அனைவரும் அங்கு படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ்சாக வேண்டும்.

நமது சமுதாய மக்கள் அனைவரும் திருப்பதி, சபரிமலை மற்றும் முருகன் கோவிலுக்கெல்லாம் போகிறீர்கள். வன்னியர்களுக்காக கட்டப்பட்டுள்ள கல்விக் கோவிலுக்கு அனைவரும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால், நாம் ஆள வேண்டும்.
இரண்டு கோடி மக்களை வைத்துக் கொண்டு, எனக்கு 40 இடம் கொடுங்கள்; 50 இடம் கொடுங்கள் என, யாரிடமாவது கையேந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இன்னும் யாரிடம் கையேந்துவது. பல கட்சிகளை வளர்த்து விட்டுக் கொண்டே இருந்தால், நாம் ஆட்சிக்கு வரவே முடியாது. வன்னியர் அனைவரும் என் பின்னால் வாருங்கள். நான் கை காட்டுபவர்களை ஆதரிக்க வேண்டும். இனியும் மனு கொடுக்கும் ஜாதியாக நாம் இருக்கக் கூடாது. மனு வாங்கும் ஜாதியாக வன்னியர்கள் மாற வேண்டும்.

நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டும் என்றார்.

மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு: பாமக போராட்டம்

மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.

மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர்.

மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.

இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Thursday, September 16, 2010

இதுதான் கூட்டணி தர்மமா?: திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு

ஜெயங்கொண்டம்: திமுக மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார் பாமக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சங்க பயிற்சி முகாமில் அவர் பேசுகையில்,

கடந்த சட்டசபை தேர்தலில் வன்னியர் சங்கத் தலைவர் குருவை திட்டமிட்டு தோற்கடித்தனர். கூட்டணியினர் வெற்றி பெற நாம் திட்டமிடுகிறோம். கூட்டணியை தோற்கடிக்க அவர்கள் (திமுக) திட்டமிடுகின்றனர். இதுதான் கூட்டணி தர்மம் என கூறுகின்றனர்.

குரு திருவண்ணாமலையில் போட்டியிட்டு டெல்லிக்கு சென்றால் இந்த தேசத்துக்கே ஆபத்து எனக் கூறி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுகின்றனர்.

அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல் சுடுகாடு எனக் கூறிய இவர்கள் மீது காங்கிரஸ் கட்சி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடவில்லை.

ஆனால், ஒரு மண்டபத்தில் பேசிய பேச்சுக்காக குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டனர். குரு தனி மனிதர் அல்ல. இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் உரிமை வேண்டும் என கிராமம் கிராமமாக சென்று தட்டி எழுப்பி போராடும் போராளி.

அவரை சிறையில் தள்ளுவது இரண்டரை கோடி வன்னியர்களை சிறையில் தள்ளுவதற்கு சமம். குரு மீது இன்னும் கூட தொடர்ந்து வழக்கு போட்டு வருகின்றனர். வன்னியர் சங்கத்துக்கு குரு தலைவர் தான். ஆனால், வன்னியர் சங்க நிறுவனர் நான் தான். அவரது பேச்சுக்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயட்டும்.

குருவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, உளவுத்துறை முயற்சி செய்தது. இதை விட வெட்கக்கேடு வேறு என்ன வேண்டும். இதுகுறித்து உள்துறை செயலாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இந்த பகுதியில் பாமக துவங்கப்பட்டிருக்காவிட்டால், குரு இன்னொரு தமிழரசன் ஆகியிருப்பார். அந்தப் பாதை வேண்டாம் என தடுத்து, அவரை ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்றோம் என்றார் ராமதாஸ்.

விஜய்காந்தின் தேமுதிக-பாமக கூட்டணி உருவாகலாம் என்று கருதப்படும் நிலையில் திமுக மீது ராமதாஸ் கடும் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, September 6, 2010

தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-ராமதாஸ்

திட்டக்குடி: நாடு சுதந்திரம் அடைந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தாமல் முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார். அதற்கு வெறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து கணக்கெடுப்பை எடுக்கலாம். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் கொண்ட ஒரு கமிஷன் அமைக்கலாம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள் அனைத்து சாதியினரையும் சேர்த்துதான் கணக்கெடுக்க சொல்கிறோம். இலவசங்களை வழங்குவது மூலம் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. எம்ஜிஆர் ஆட்சியின் போது இலவச காலனி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை மட்டும் செயல்படுத்தினார்.

1989ல் 3வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பேசிய கருணாநிதி , இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் என்றார்.

இதை நான் இப்போது கூறும்போது கருணாநிதிக்கு கோபம் வருகிறது. அவர் 1989ல் சொன்னதைத்தான் தற்போது நான் திருப்பிச் சொல்கிறேன்.

இலவச டிவி கொடுப்பதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையிலேயே இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இலவச கழிவறை கட்டி தர வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ. 25,000 பணமாகக் கொடுக்க வேண்டும். தற்போது விவசாய விளை நிலங்களை வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்றி வீட்டு மனைகளாக மாற்றி வருவது விவசாயத்தை அழித்துவிடும். இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவர வேண்டும்.

இல்லையெனில் 5 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும்நிலை உருவாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் நாட்டின் வளர்ச்சிக்காக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாமகவே முன்னின்று தமிழ்நாட்டில் இருந்து எந்தப் பொருளும் கேரளாவிற்கு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தி கேரளாவுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவோம்.

தேர்தலில் பாமக தனித்து நிற்பதன் மூலம் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வர வழி வகுப்பதாக கூற முடியாது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய ராமதாஸ்,

உலகில் அரசியல் இல்லாமல் ஒரு துரும்பு கூட அசையாது. ஒவ்வொரு குடிமகனின் தலைவிதியை நிர்ணயிப்பது அரசியல்தான்.

வடஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து திருவண்ணாமலை மாவட்டம் 30 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் வளர்ச்சி அடைந்து எங்கேயோ போய் விட்டார்கள்.

பாமகஅத்திப்பூ என்கிறார்கள். பாமக பூசணி பூ, இது ஆண்ட கட்சி, அத்திமரம், உழைக்கும் மக்களின் கட்சி. தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

பின்னர் பேசிய அன்புமணி, நான் அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 அவசர ஊர்தி சேவை திட்டங்களை கொண்டு வந்தேன். இந்தியாவிலேயே ஐ.நாவால் பாராட்டப்பட்ட ஒரே திட்டம் இந்த சுகாதாரத் திட்டம்தான்.

ஒரு பக்கம் இலவசம். மறுபக்கம் டாஸ்மாக் கடை. 1995ம் ஆண்டு மதுபானம் மூலம் அரசுக்கு ரூ. 1,400 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு மதுக்கடை மூலம் ரூ. 13,000 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை மூலம் அடுத்த ஆண்டு ரூ.15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் வயிற்றில் அடித்து, கிடைக்கும் இந்த வருமானம் மூலம் இலவசங்களை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக இலவச கல்வி, வேலைவாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

சோனியா காந்திக்கு ராமதாஸ் வாழ்த்து:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு ராமதாஸ் பேக்ஸ் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், உங்களது செயல்திறன் மிக்க மற்றும் திறமையான தலைமையின் மூலம் சமூக ரீதியாகவும், கல்வியிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களின் துயரங்கள் தீர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

Thursday, September 2, 2010

திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும்-திருமாவளவன்

சென்னை: வட மாவட்டங்களில் திமுக கூட்டணி வலிமை பெற பாமக பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை.

திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுகின்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அதிக அளவு பணத்தைக் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள். வட மாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றார்.

Wednesday, September 1, 2010

விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கும் ராகுலை கண்டிப்பாரா கருணாநிதி?: ராமதாஸ்

திருப்பத்தூர்: அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருந்த வானூர்தி நிலையத்தை இடம்மாற்றியது ஏன்? விளைநிலங்களை கையகப்படுத்தித்தான் வானூர்தி நிலையம் அமைக்கவேண்டுமென்றால் அது தேவையில்லை. இதனை தெரிவித்தால் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக என் மீது முதலமைச்சர் புகார் கூறுகிறார்.

அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா?.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது என்றார் ராமதாஸ்

Thursday, August 26, 2010

பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை:

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்அமைச்சரிடம் செய்தியாளர்கள் மீண்டும் மதுவிலக்கு வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பரிசீலனை செய்வோம் என்று தான் கூறினோம். எத்தனை நாள் என்று கூறவில்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார். போராட்டங்கள் நடத்திய மதுக்கடை ஊழியர்களை மிரட்டுவதற்கு இந்த அறிவிப்பை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன்.

வீதிதோறும் மதுக் கடைகளை திறந்து வைத்து, மது குடித்தால் உடலுக்கு கேடு என எழுதி வைத்து விட்டு புதிய புதிய மது ஆலைகளை திறக்க அனுமதி தந்து மது விற்கப்பட்டும் வருகிறது. 13 வயது பள்ளி சிறுவன் கூட குடிக்க ஆரம்பித்துவிட்டான். 1971க்கு பிறகு பல தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை தமிழக முதல்வர் தட்டிகழித்து வருகிறார். யாரும் கேட்காமலே புதுச்சேரி முதல்வர் நவம்பருக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தருவேன் என கூறி உள்ளார்.

ஆனால் இங்கே ரூ.400 கோடி செலவாகும். இதனால் மத்திய அரசு பணம் தந்தால் கணக்கெடுப்போம் என தட்டிக் கழிக்கிறார்கள். ரூ. 4,000 கோடி செலவானாலும் பரவாயில்லை. இது அவசியமானது. இதை தமிழக அரசுத்தான் செய்ய வேண்டும். நான் சொல்வதற்காக இல்லாமல், உச்சநீதிமன்ற ஆணைக்காக செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் 69 சதவீத இட ஒதுக் கீடுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு தேவையில்லை. பழைய வாக்குசீட்டு முறை வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரயில்வே கோட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இந்த பகுதியில் 7அமைச்சர்கள் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை.

காவிரி உரிமையை நாம் இழந்தோம். ஒரு இனம் அழிவிற்கு காரணமாக நாம் இருந்திருக்கிறோம். ஈழ அரசையே நடத்தி வந்த ஒரு இயக்கம் முற்றிலும் அழிவதற்கு நாம் காரணமாக இருந்தோம்.

காவிரி பாலாற்றுடன் முதலில் இணைக்க வேண்டும். வைகை தாமரபரணியுடன் இணைக்க வேண்டும். ஆனால் காவிரியையும், வைகையையும் இணைக்க பேசுகிறார்கள். பாலாற்றில் நீரை பார்த்து பல ஆண்டாகி விட்டது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றார்.

கேள்வி: பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை பறித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

கேள்வி: சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்பட ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

பதில்: இது தொடர்பாக பாமக போராட்டம் நடத்தும். அதே போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட, மாவட்ட தலைநகர்களில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும்.

கேள்வி: பல கட்சியினரும் திமுகவில் இணைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க் கட்சியைச் சேர்ந்த, சேலத்துக்கு பக்கத்து மாவட்டத்துக்காரர் (செல்வகணபதி?) மீது ஊழல் புகார் இருக்கிறது. ஆனால், அவர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகிவிட்டார் என்றார்

மாநில அரசே ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு க்காக காத்திருக்காமல் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கை.

பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக் கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால், மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Wednesday, August 25, 2010

அன்புமணிக்கும் அழைப்பு வைத்த ரஜினி

மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணிக்கும் நேரில் போய் அழைப்பு வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடக்கும் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணத்தையொட்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் வைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் ரஜினி.

இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு வைத்தார் ரஜினி.

பின்னர் மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

நேற்று காலை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அவரது வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார் ரஜினி.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேற்று பிற்பகலில் சந்தித்தார் ரஜினி. அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கினார். அன்புமணியும் அவர் மனைவி சௌம்யா அன்புமணியும் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனாலும் அவர் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸை சந்திக்கவில்லை

100 தொகுதிகளுக்கு குறி-ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!

சேலம்: 100 தொகுதிகளில் வெற்றியைக் குவிக்க டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி செயல்பட்டு 100 தொகுதிகளை நாங்கள் வெல்வோம் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

சேலம் வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது...

பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி ரீதியாகவும், கட்சியின் அமைப்புகள் ரீதியாகவும் பலப்படுத்தி, அதனை தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் எங்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மைக்ரோ பிளான் என்ற திட்டம் வகுத்துள்ளார்.

இந்த திட்டத்தின்படிதான் பென்னாகரம் இடைத்தேர்தலில் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். அதற்கு கிடைத்த பலனாகத்தான் அந்த தேர்தலில் எங்கள் கட்சி இரண்டாவது இடத்தை பெற முடிந்தது.

அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்தி, தமிழகம் முழுவதும் அதனை செயல்படுத்தி கட்சியை பலப்படுத்த டாக்டர் ராமதாஸ் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் 100 சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்து இந்த மைக்ரோ பிளான் செயல்படுத்தப்பட உள்ளது.

மைக்ரோ பிளான் திட்டத்தின் கீழ் நாங்கள் அதனை செயல்படுத்தும் 100 தொகுதிகளிலும் தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக 60 தொகுதிகளில் நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இதில் முதன் முதலாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு மக்களுடன் கலந்துரையாடி வந்துள்ளோம்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:

அடுத்ததாக சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட அனைவரும் வந்து பணியாற்றி வருகிறோம். இங்கு கிராமம் கிராமமாக சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறுவதோடு, அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கட்சியில் புதியவர்களாக சேர ஏராளமான இளைஞர்கள் குறிப்பாக எல்லா சாதி சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் முன்வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதியவர்களை கட்சியில் சேர்ப்பதில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்த்து வருகிறோம். புதிதாக கட்சியில் சேருபவர்களுக்கு பா.ம.க.-வின் கொள்கைகள், அரசியல் திட்டம், மக்கள் நலனுக்காக பாடுபடுவது போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நாளைநடத்தப்படுகிறது.

காலையில் தீவட்டிபட்டி-மாலையில் ஓமலூர்:

இந்த முகாம் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் 26-ந் தேதி வருகிறார்கள். காலையில் தீவட்டிபட்டியிலும், மாலையில் ஓமலூரிலும் என 2 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார் மணி.

Wednesday, August 18, 2010

புதிய விமான நிலையத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

சென்னை: சென்னை அருகே க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து எனது தலைமையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் இருப்பிடங்களையும், விவசாயிகளின் விளைநிலங்களையும் அபகரிக்கக்கூடாது.

சென்னைக்கு அருகே க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பாதிக்கப்படாதவாறு வேறு மாற்று இடங்களை தேர்வு செய்து க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு முன் வர வேண்டும்.

சென்னையை சுற்றி தனியார் வளைத்துப் போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு குறையும்.

விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 23ம் தேதி திருவள்ளூரில் எனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Tuesday, August 17, 2010

சமூக நீதி குறித்து கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பேசக் கூடாது-ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் இது பற்றி பேசத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக தொடர் போராட்டங்கள் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பாராட்டி, அக்கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ராமதாஸ் பேசியதாவது:

இந்தக் கூட்டத்தை பாராட்டுக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

எனவே, தமிழக அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியாக வேண்டும்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்றும், அடுத்த ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வளவு இடஒதுக்கீடு தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவேளை பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 85 சதவீதமாக இருக்குமானால், அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.

நாடு சுதந்திரம் பெற்ற பின், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இப்போது மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பல மாநிலங்களுக்கு சென்று, ஆதரவை திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்த கட்சியாவது இதற்காக குரல் கொடுத்தது உண்டா?

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து மாநில எம்.பி.க்களிடமும் பா.ம.க. கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியது. 174 எம்.பி.க்களின் கையழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சென்று அப்போதைய உள்துறை அமைச்சரிடம் அளித்தார் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி. அந்த மனுவில் பா.ம.க.வைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர்.

பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இப்போது தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதும் பா.ம.க. மட்டுமே. இவ்வாறு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசுக்கு எதிராக பா.ம.க. பெரும் போராட்டத்தில் ஈடுபடும். இதற்காக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்கு தொடர்ந்ததைப் போல என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அதைச் சந்திக்கத் தயார் என்றார் ராமதாஸ்.

Thursday, August 12, 2010

சாதிவாரி சென்ஸஸ்: இனி்ப்பு வழங்கி கொண்டாடிய பாமக

சென்னை: நாடு விடுதலைப் பெற்ற பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்தை பாராட்டி வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சலுகை நிறைவாகக் கிடைக்க உதவிடும் வகையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்காக கடந்த மக்களவையில் உறுப்பினர்களாக இருந்த 300க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கி, அப்போது உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் உள்துறை அமைச்சரிடம் மனு அளித்தார்.

பாமகவின் தொடர் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

இதற்கு உறுதுணையாக இருந்த லாலு பிரசாத் யாதவ், முயலாம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட சமூக நீதியில் அக்கறை கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய பாமகவினர்:

இதற்கிடையே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழகம முழுவதும் பாமகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சென்னை தி.நகர் பஸ் நிலையம் முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது மணி பேசுகையில்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாமக போராட்டம் நடத்தி வருகிறது. 300 எம்.பிக்களின் கையெழுத்து வாங்கி மத்திய அரசிடம் அன்புமணி வழங்கினார்.

இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இனி சட்டமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு கிராம நிர்வாக அதிகாரி மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

27% இட ஒதுக்கீடு-அமலாக்க கால நீட்டிப்பு கூடாது:

இந் நிலையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுவதுமாக அமல்படுத்த மேலும் மூன்று ஆண்டுகள் கால அவகாசத்துக்கு வழி செய்யும் மசோதாவுக்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீத இடங்களை ஒதுக்கி, மூன்றாண்டுகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு எட்டப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, மேலும் 3 ஆண்டுகள் காலத்தை நீட்டிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள சமூக நீதியாளர்கள், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள், கட்சிகளைக் கடந்து இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டுமா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tuesday, August 10, 2010

விஜயகாந்துடன் கூட்டணிக்குத் தயார்-ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,
எங்கள் வாக்கு வங்கி சரியவில்லை. பாமகவுக்கு அடிப்படையாக இருப்பது வன்னியர்களும் வட தமிழகமும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுக்கு பலமே வன்னியர்கள் ஆதரவுதான்.

தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறைவேறி இருக்காது. ஆதரவு கொடுப்பதற்கு முன் ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் திமுக தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.

நாங்கள் அவர்களை நம்பினோம். திமுக நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள். நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம். (அன்புமணி்க்கு ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டார். ஆனால், 2013ம் ஆண்டு ராஜ்சபா தேர்தலில் தான் சீட் தருவோம். அதுவரை பாமக காத்திருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது)

இப்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. திமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதல்வசர் கருணாநிதியை சந்தித்தது. அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக இன்னும் காத்திருக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணிக்கான கதவை மூடிவிட்டதாகவும் சொல்ல முடியாது.

அரசியலில் எந்தக் கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது.

தேமுதிகவுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் ராமதாஸ்.

தனித்து நின்றால் 20 கிடைக்கும்:

முன்னதாக நெல்லையில் பேசிய ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.

தேனியில் நேற்று அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.

பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.

திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கிறது.

ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:

இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.

இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தச் சூழலில் தான் இன்று பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் தான் தேமுதிக, அதிமுக என எந்தக் கூட்டணிக்கும் தயார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக, திமுக, காங்கிரஸ் நீங்கலாக தமிழகத்தில் உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேச தயாராக இருக்கிறோம் என்றார்.

Sunday, August 8, 2010

எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-அன்புமணி சவால்

சேலம்: பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி

ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்

மதுரை: திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அழைத்தால் பேசுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.

திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.

காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதில்இடம் பெறுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் ராமதாஸ்.

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்-ராமதாஸ்

பரமக்குடி: தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பரமக்குடி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமூகநீதிக் கட்சியான பா.ம.க.வில் தென் மாவட்டங்களில் நாடார், முக்குலத்தோர், பிள்ளைமார், யாதவர் ஆகிய சமுதாயத்தினருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி. என்பது பட்டியல் சாதியினர். இதனை பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அரசு ஆவணங்களில் தேவேந்திரகுலத்தினர் பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை மாற்றி தேவேந்திரகுலத்தார் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அருந்ததியருக்கு வழங்கப்படுவது போல் தேவேந்திரர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது 13 வயது இளைஞர்களும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுக்குள் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் 34 மாவட்டங்களிலும் மகளிரைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.

கடந்த 3 ஆண்டுகளில் குறைகளை சுட்டிக்காட்டியதால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

Thursday, July 29, 2010

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: போராட்டம்

காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை.

உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்றார் அன்புமணி.

தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம்-காடுவெட்டி:

வன்னியர்களுக்கு ஒழுங்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து விடுங்கள். இல்லாவிட்டால், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் தண்டவாளங்களைப் பெயர்த்து போராடியதைப் போல வன்னியர்களும் போராட நேரிடும் என வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசினார்.

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தரக் கோரி நேற்று வன்னியர் சங்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு ராமதாஸ் தலைமை தாங்கினார்.

அதேபோல அரியலூரில்நடந்த போராட்டத்திற்கு காடுவெட்டிகுரு தலைமை தாங்கினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசினார்.

காடுவெட்டி குரு பேசுகையில்,

வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஜாதி இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என்றார் காடுவெட்டி.

Friday, July 23, 2010

கூட்டணியை ராமதாஸ் பார்த்துக் கொள்வார்: அன்புமணி

திருப்பத்தூர்: கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. அதில்
அன்புமணி பேசுகையி்ல்,

பாட்டாளி மக்கள் கட்சி முதன்மை கட்சியாக வரவேண்டும் என பேசிக் கொண்டே இருந்தால் வராது. தொண்டர்கள் கடுமையாக உண்மையாக உழைக்க வேண்டும். கிராமந்தோறும் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4 சட்டமன்ற உறுப்பினர்களையாவது வெல்ல வைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 நாட்கள் தங்கி கிராமம் கிராமமாக சென்று மக்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.

வெறிபிடித்த அடிமட்ட தொண்டர்கள் இருப்பது நமது கட்சியில் மட்டும் தான். நமது கட்சியை அழிப்பதற்கு யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள்.

பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.

கட்சி நிர்வாகிகள் பழைய ஆட்களை சென்று பார்க்க வேண்டும். அவர்களது குறைகளை கேட்டு மீண்டும் அவர்களை அழைத்து வரவேண்டும். வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் நமது கட்சியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களை அணுகி நமது கட்சியில் புதியதாக சேர்க்க வேண்டும்.

இதற்கு முன்பு எப்படி இருந்ததோ தெரியாது. இனி இப்படி தான் இருக்க போகிறோம். கட்சிக்காக முழு நேரத்தை நான் செலவிட போகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அந்த இடத்திற்கு நான் வந்து நிற்பேன். நமது கட்சியில் கோஷ்டிகள் இருக்ககூடாது. நாம் அனைவரும் ராமதாஸ் கோஷ்டி தான்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. பெரிய மாவட்டமாக உள்ள இதனை பிரித்து திருப்பத்தூரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாவதற்கு சிலர் தடையாக உள்ளனர். சிலரின் சுயநலனுக்காகப் பிரிக்காமல் இருக்காதீர்கள். மாவட்டத்தை பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக பாலாறு பிரச்சனை. இதற்காக பலமுறை நமது கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளது. இருப்பினும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டி வருகிறது. எனது தலைமையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை உடைக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும்.

கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். அது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம்.

கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அதை தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் யாரும் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது.

வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன் என்றார் அன்புமணி.

Thursday, July 22, 2010

பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி

திருவள்ளூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அக் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி கூறினார்.

பாமக பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி,

கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடும் உழைப்பே என்றென்றும் வெற்றியைத் தரும். ஆகையால் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் பதவியும், பொறுப்புகளும் அவர்களைத் தேடி வரும்.

கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அளவில் பொதுக்குழு அமைக்கப்படும்.

ஒன்றியச் செயலாளர்களாக பொறுப்பு வகிப்பவர்களுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைச் செயலாளர்களின் பெயர்களும் தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் வரும் முன் அந்தந்த பகுதி நிர்வாகிகள் நேரடியாக மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பதுடன் கட்சியின் கொள்கைகளையும் பரப்ப வேண்டும்.

ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றால் கட்சியே அழிந்துவிடும், காணாமல் போய்விடும் என பலர் பேசுகின்றனர். ஆனால் 1991ம் ஆண்டு திமுக ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 1996ம் ஆண்டு அதிமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அந்தக் கட்சிகள் வளர்ச்சி அடையவில்லையா?. அதுபோல் பாமகவும் மீண்டு வரும், தேர்தலில் முழு எழுச்சி பெறும். பாமகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார்.

Wednesday, July 21, 2010

அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு

சீர்காழி: திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணி தான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.

சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.

1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா? எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.

வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.

Thursday, July 15, 2010

28ம் தேதி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்-ராமதாஸ்

செஞ்சி: வருகிற28ம் தேதி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செஞ்சியில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. நமக்கு போராட்டம் என்பது புதிது அல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகள் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. இன்னும் நமக்கு வேண்டியது கிடைக்கவில்லை.

69 சதவீத இடஒதுக்கீடு நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நல்ல தீர்ப்பு அதற்கு பா.ம.க.வும் ஒரு காரணமாகும். இது சமூக நீதிக்காக போராடும் கட்சி. ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவரும் சம உரிமை பெற வேண்டும்.

108 ஜாதிகளுக்கு சேர்த்து வழங்கிய ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும். இதற்கு கோரிக்கை வைக்க யாரும் முன் வரவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் 41 சதவீதம் குடிசைகளில் வாழ்பவர்கள் வன்னியர்கள். சுதந்திரம் என்ன ஆனது.

விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி கூறுபோட்டு விற்கிறார்கள். விவசாயம் பாதிக்கப்படக்கூடாது. நம் மண்ணை, நிலத்தை மார்வாடிகளும், ஆந்திராகாரர்களும் வாங்குகிறார்கள். மண்ணை மட்டும் இழக்கவில்லை, விவசாயத்தையும் இழக்கிறோம். விளை நிலங்கள் கூறுபோடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் நீங்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

மீண்டும் ஜாதி அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் பாமக, பல வருட இடைவெளிக்குப் பின்னர் வன்னியர்களுக்காக நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 12, 2010

என்ஜினீயரிங்-அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ்வழி:ராமதாஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதுவை சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசுகையில், புதுவையில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர்.

புதுவையில் இளைஞர்களை பாமகவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். முதியவர்கள் பல்வேறு கட்சியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இனிமேல் மீட்க முடியாது.

புதுவையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்தால், ஆட்சியை நாம் தான் நடத்துவோம். புதுவையில் ஒரே ஒரு தடவை வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தார். அதற்கும் நாம் தான் காரணம். ஆனால், அந்த முதல்வர் வன்னியர் சங்க கூட்டத்தில் வந்து, நான் வன்னியர் என்று கூறுவாரா?. கூறமாட்டார்.

அவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிலும் பொறுப்பு வகிப்பவர்கள் கூட வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், அவர்கள் கட்சியிலுள்ள ஆதிக்க ஜாதி தலைவர்களை மீறி அவர்களால் பேச முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.

என்ஜினீயரிங்-அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ்வழி:

இதற்கிடையே ராமதாஸ் அறிக்கையில், இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளபடி இது தன்னிகரில்லா திட்டம்தான். ஆனால், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் அதுவும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளை தொடங்கி இருப்பது போதாது. தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பொறியியல் படிப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ் வழி வகுப்புகளை தொடங்க வேண்டும்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளோடு நின்று விடாமல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்வழி கல்வி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதற்கும் தமிழ்வழி கல்வி வகுப்புகளை தொடங்கி நடத்த வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும்.

அத்துடன் மாணவர்கள் பெருமளவில் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் சேர்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம் பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாநில மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணி நியமனத்தில் தமிழ்வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம். அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழை பயிற்சி மொழியாக கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன.

எனினும் இன்றைக்கும் அதே திட்டத்தை அறிவிக்கும் நிலைமை இருக்கிறது என்றால், அதிகார வர்க்கமும், ஆங்கில மோகமும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடைகளை தகர்த்தாலொழிய நாம் எதிர்பார்க்கிற பலனை அடைய முடியாது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது இந்த தடையை தகர்க்க ஓரளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்தச் சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் வரை காத்திருக்காமல் இதை ஓர் அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் நடப்பு கல்வி ஆண்டிலேயே பொறியியல் பட்டப்படிப்பில் மட்டுமின்றி இதர கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Friday, July 9, 2010

பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு

சென்னை: பாமக மாநிலத் தலைவராக 7வது முறையாக இன்று ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்தது. அதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பொருளாளராக அக்பர் அலி செய்யது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைஞர் அணி தலைவர் அன்புமணி :

மாநில பாமக இளைஞர் அணித் தலைவராக டாக்டர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியின் செயலாளர்களாக இரா. அருள், அறிவு செல்வன், செந்தில்,சைதை சிவா, பொதுச் செயலாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வாயினர்.

கூட்டத்தில் தமிழில் படித்தவர்களுக்கு மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசுக்கு வழங்குவது.

-மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

-மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

-உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

-மண்ணெண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். -பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளைக் குறைக்க வேண்டும்.

-இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள 3 நபர் கொண்ட விசாரணைக் குழுவை பாமக வரவேற்கிறது. ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று செயல்படும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசிடம் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

-இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியா தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு உறுதியுடன் வற்புறுத்த வேண்டும்.

-தனியார் பள்ளிகளில் கட்டண சீரமைப்பு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழுவினரால் அறிவிக்கப்பட்ட கட்டண விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

-காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த சிக்கல் தீர்க்கப்படாத வரை மத்திய மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அணைகளில் இருந்து இடைக்கால தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: