Wednesday, January 27, 2010

ஓட்டு போடும்போது ஒரே ஒருதரம் என் பேச்சை கேளுங்கள்-ராமதாஸ்

செஞ்சி: 42 வருடம் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆண்டனர். 1 வருடம் கூட வன்னியன் ஆள தகுதி இல்லையா? ஒரே ஒருதரம் தேர்தலில் ஓட்டு போடும்போது இந்த ராமதாசின் பேச்சை கேளுங்கள். 234 தொகுதிகளில் 130 பேர் நாம் ஜெயிக்கலாம். பின்னர் தொடர்ந்து நாமே ஆட்சி செய்யலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செஞ்சி அருகே அன்னமங்கலத்தில் நடந்த திருமண விழாவில் அவர் பேசுகையில்,

வீர வன்னியர்கள் அக்னியில் பிறந்தவர்கள். நாட்டில் உள்ள 500 ஜாதிகளில் 6 கோடி பேரில் வன்னியர்கள் மட்டும் 2 கோடி பேர் உள்ளனர். இவ்வளவு இருந்தும் சமுதாயத்தில் உரிய பங்கு கிடைக்கவில்லை. யாகத்தில் தோன்றியவன் வீர வன்னியன்.

நம் முன்னோர்கள் ஆண்டவர்கள், ஆட்சி செய்தவர்கள் ஜமின்தாராக இருந்தவர்கள். இப்படி ஆண்ட பரம்பரைக்கு இன்று வேலைவாய்ப்பில் 100ல் ஒரு இடம் தான் கிடைக்கிறது.

அதற்காக 1980 ல் வன்னியர் சங்கம் தொடங்கி டாக்டர் தொழிலில் சம்பாதித்த பணத்தை செலவழித்து கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்தேன். சாலை மறியல் போராட்டம் நடத்தி பலமுறை சிறை சென்று போராடினோம்.

அந்தப் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொண்டவர்கள் இந்த செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள், ஏன் தேர்தலைகூட புறக்கணித்த கிராமங்களில் அண்ணமங்கலமும் ஒன்று. 7 நாள் சாலை மறியல், 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பிறகுதான் நமக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது.

தமிழகத்தில் இதுவரை 30 பேர் முதல்வராக இருந்துள்ளனர். இதில் 6 கோடியில் 2 கோடி வரை உள்ள வன்னியர் ஒருநாள் கூட முதல் வராகவில்லை. காரணம் ஒற்றுமை இல்லை. விழிப்புணர்வு இல்லை.

இன்று 130 வன்னியர்கள் நீதிபதிகளாகவும், 3 பேர் கலெக்டராகவும் உள்ளனர் என்றால் இது எனது போராட்டத்தால் கிடைத்தது. தற்போது எனது போராட்டத்தால் 350 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 7 பேர், 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 2 செக்ரட்டரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். எப்போது இதற்கு விடிவுகாலம்?.

தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடுகிறீர்கள். நம் ஜாதி இளைஞர்கள் நடிகர் கட்சியை (விஜய்காந்த்) வளர்க்கின்றனர், என்ன சமுதாயம் இது?.

42 வருடம் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டனர். 1 வருடம் கூட வன்னியன் ஆள தகுதி இல்லையா? ஒரே ஒருதரம் தேர்தலில் ஓட்டு போடும்போது இந்த ராமதாசின் பேச்சை கேளுங்கள்.

234 தொகுதிகளில் 130 பேர் நாம் ஜெயிக்கலாம்.பின்னர் தொடர்ந்து நாமே ஆட்சி செய்யலாம்.

கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா, நடராசன் 'மன்னார்குடி மைனர்கள்' எல்லாம் தமிழகத்தை ஆள்வார்கள்.

காங்கிரசில் வன்னியர்களுக்கு முதல்வர் பதவி தர மாட்டார்கள். திமுக, அதிமுக, நடிகர் கட்சி என எதிலாவது வன்னியருக்கு ஒரு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? எத்தனை நாள் இவர்களிடம் கெஞ்சுவது.

பென்னகரம் தொகுதியில் 2000 பெண்களை அழைத்து பேசினோம். அவர்களில் யாரிடமும் பட்டுப் புடவையோ, தங்க நகையோ இல்லை. இதற்கு யார் கவலைப்படுவது?.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் எஸ்எஸ்எஸ்சி, பிளஸ் டூ வகுப்பில் பாஸ் செய்வதில் முதல் இடம் விருதுநகர் மாவட்டம், கடைசி இடம் விழுப்புரம் மாவட்டம். ஆனால் குடியில் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு குடிக்கச் சொல்லி அதில் வரும் பணத்தையே உங்களுக்கு வேட்டி, சேலை, டி.வி. என இலவசங்களை தருகின்றனர்.

எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளை உங்களுக்காக ரூ.5 கோடியில் 250 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள கல்வி கோவிலில் சேர்த்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்றவர்களாக உருவாக்குங்கள் என்றார் ராமதாஸ்.

Sunday, January 24, 2010

பென்னாகரம் இடைத் தேர்தலை தள்ளிப் போட சதி - ராமதாஸ்

சென்னை: தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் திமுக, பென்னாகரம் இடைத் தேர்தலை தள்ளிப் போட முயற்சித்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

2006 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய பா.ம.க. ஆதரவு அளித்தது. இன்று வரை நாங்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தில் உறுதியாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தி.மு.க. தான் கூட்டணி தர்மத்தை மீறி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாழ் யூனியன் தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்கடித்துள்ளார்கள்.

பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே தான் மே மாதம் தேர்தலை தள்ளி வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நாங்கள் அடுத்த மாதம் தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளோம்.

நளினி விடுதலை விவகாரத்தில் அரசின் மரபுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நளினியை போலவே வீரப்பனின் அண்ணன் மாதையன் 22 வருடங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை.

நாட்டில் நடக்கும் மிகப்பெரிய பகல் கொள்ளையாக கல்வி வணிக கொள்ளை நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் கல்வி வியாபாரத்தை தடுப்பதற்காக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தியாவில் உள்ள 126 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 44 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 28 பல்கலைக்கழகங்களில் 16 நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளால் நடத்தப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களுக்கு பெரிய அந்தஸ்தும் கவுரவமும் கிடைக்கிறது.

நிகர்நிலை பல்கலைக் கழக வழக்கில் தேவைப்படும் பட்சத்தில் அரசு தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறது. யாருக்கும் கட்டுப்படாமல் செயல்படுகிறது. கல்வி நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாதது, அரசின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை மதிக்காதது, வரை முறை இல்லாமல் மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடனும், சுதந்திரத்துடனும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பல்கலைக்கழகங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

Monday, January 11, 2010

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு-பாமக கோரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதற்காக தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி,

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் வகையில் இந்த அரசு செயல்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருப்பது போல தொகுப்பு முறையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இஸ்லாமியர், அருந்ததியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது போல வன்னியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்வேறு ஜாதி சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிச்சன், குடும்பன் என்ற இனத்தவருக்கு பழங்குடி மக்களுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

மாநில சுயாட்சி பெறுவதற்கும் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கும் தமிழக அரசு என்ன முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ராமநாதபுரம் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றியது போல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் உரையில் தமிழக வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ ஏதும் சொல்லப்படவில்லை என்றார் மணி.

Monday, January 4, 2010

இதை சாதனை என்பதா? வேதனை என்பதா?.

விழுப்புரம்: 1952-ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

விழுப்புரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

இந்தப் புத்தாண்டு நமது சமுதாயத்தினருக்கு உன்னத ஆண்டாகவும், வெற்றி ஆண்டாகவும் விளங்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். நம்முடைய சமுதாயத்தினரின் நிலையை ஆராய்ந்து பார்க்கும் போது நாம் இன்னும் கீழ் நிலையில்தான் இருக்கிறோம்.

3 கோடி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். தமிழ்நாட்டில் ஆறரை கோடி மக்கள் உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 3 கோடி பேர் அரை நிர்வாணமாகத்தான் உள்ளனர். இதில் 2 கோடி பேர் வன்னியர்கள்.

ஆட்சி அதிகாரத்துக்காக வன்னியர்களை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர். அரசியலில் வன்னியர்கள், அநியாயமாக வீணாகி விட்டனர்.

கடந்த 1952ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த 1980ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஒரு கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் நிறைவேறுவதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். இட ஒதுக்கீட்டுக்காக 7 நாள் மறியல் போராட்டத்தை நடத்தியதில் சில வன்னியர்களை இழந்தோம்.

கடந்த தேர்தலில் திட்டமிட்டே நம்மை தோற்கடித்தனர். இதற்காக மேல் ஜாதியினரும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து தோற்கடித்து விட்டனர். பாமக வளர்ச்சியை விரும்பாமல் அழிக்க நினைக்கின்றனர். பணத்தை கொடுத்து வன்னியர்களின் ஓட்டுகளை பெறுகின்றனர்.

சினிமா, டி.வி. சீரியல்களால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கெட்டு விட்டனர்.

கற்கும் விருதுநகர்-குடிக்கும் விழுப்புரம்:

கல்வி தேர்ச்சி சதவீதம் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் மதுபான விற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் ரூ.48 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. இதை சாதனை என்பதா? வேதனை என்பதா?.

மத தலைவர்களுடன் சேர்ந்து சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். படிப்படியாக செய்கிறேன் என்றவர் இதுவரை செய்யவில்லை.

1971ம் ஆண்டில் செய்த தவறை நீக்கி இந்த ஆண்டில் பூரண மது விலக்கை கொண்டு வருவீர்கள் என நினைக்கிறேன். பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வருகிற சித்திரை மாதம் மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் சங்க மாநாடு நடைபெறும். பூம்புகாரில் மகளிர் மாநாடும் நடைபெறும் என்றார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: