Sunday, June 27, 2010

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி சென்னையில் கூடுகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந் தேதி, சென்னையில் கூடுகிறது.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள், கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, அளவிலான அனைத்து நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Friday, June 25, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்-ராமதாஸ்

சென்னை: பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு என அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது சங்கிலி தொடர்போல அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு என அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது சங்கிலி தொடர்போல அலை அலையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே, உயர்ந்து கொண்டே போகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவற்றின் விலை மேலும் உயர வழிவகுக்கும். அத்துடன் இதர அனைத்து நுகர் பொருட்களின் விலையையும் இது உயர்த்திவிடும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது புதிதாக ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கிராமப்புற ஏழை எளிய குடும்பங்கள் மீது கூடுதல் சுமையை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி மண்எண்ணை மற்றும் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க மாநில அரசுகள் அவற்றின் மீதான விற்பனை வரியை குறைக்கலாம் என்று அண்மையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனையை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன், அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை மீண்டும் வழங்கவும் மாநில அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tuesday, June 22, 2010

பாமக-விடுதலை சிறுத்தை இணைந்து பாடுபடும்: ராமதாஸ்

வேலூர்: ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து பாடுபடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வேலூரை அருகே பொய்கையில் திருமண மண்டப திறப்பு விழாவில் அவர் பேசுகையில்,

வட ஆற்காடு மாவட்டத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அடிமைகளாக உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதுதான் நோக்கம்.

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை கழிவுகளால் மண் கெட்டுவிட்டது. இந்தியாவில் கருப்பு மாவட்டம் என்ற அவப்பெயரை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதை சரி செய்ய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்களாக உள்ள தலித் மக்களையும் வன்னிய மக்களையும் இந்த அளவுக்கு ஒடுக்கி வைத்தது யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனது தம்பி திருமாவளவனின் சகோதரர்களும் இங்கு வந்திருக்கின்றனர். உழைக்கும் கரங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நானும், திருமாவளவனும் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் உழைத்தால்தான் மற்ற சமுதாய மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த இரு சமுதாய மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? நம்மை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து தாங்க வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பாமகவும்- விடுதலை சிறுத்தையும் இணைந்து பாடுபடும் என்றார்.

Tuesday, June 15, 2010

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

திருக்கோவிலூர்: பாமகவைப் போல வேறு எந்தக் கட்சி யிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார் என்றப அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

முகையூர் பாமக எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமண விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழும் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், இது போதாது.

இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.

பாமக கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கைகள் இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பாமகவையே கலைத்து விடவும் தயாராக உள்ளேன்.

சமூக நீதிக்காகவும், சமூக-பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல் , பண்பாடு ஆகியவற்றுக்காகவும் உரக்க குரலெழுப்புவதற்கு பாமகவைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்றார்.

Tuesday, June 8, 2010

பாமகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் தர முன்வந்த அதிமுக!

சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ராஜ்யசபா எம்பி சீட் தருவதாகவும் கூறியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் தோல்வி மூலம் தேர்தல் நேர பேரம் பேசுவதில் பாமகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேரம் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடே இல்லை.

இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் உள்கட்சித் தேர்தல் ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன. மற்றவை பற்றி கூட்டத்தில் பங்கேற்ற யாரும், எதுவும் பேசவில்லை.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்று கூறுவார்கள். ராஜாஜி, கட்சி கூட்டத்தில் திமுகவை மூட்டைப் பூச்சியை போல நசுக்கி விடுவேன் என்று முழக்கமிட்டார். ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து திமுகவினர் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் 1967ல் எதிரும், புதிருமாக இருந்த திமுக, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டுகள் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நான்சென்ஸ் என்று நேரு கூறியதற்காக போராட்டம் நடத்திய திமுக 71ல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. இதுபோல நிறைய உதாரணங்களை கூற முடியும்.

திமுகவுடன் பா.ம.க. கூட்டணி சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை 2 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். கூட்டணி பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்.

கூட்டணியை ஒரே நாளில் பேசி முடிவு செய்து விட முடியாது. அதற்கு சில நாட்கள் தேவைப்படும். திமுகவுடன் கூட்டணி அமைக்க எங்களின் கோரிக்கை என்ன என்பது பற்றி உங்களிடம் (பத்திரிகையாளர்களிடம்) கூற முடியாது.

எங்கள் குழு முதல்வரை நேற்று சந்தித்தது. மீண்டும் முதலமைச்சரை சந்திக்கும். அவரை சந்தித்த பின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

ராஜ்யசபா எம்பி பதவி குறித்த பிரச்சனைக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலும் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. நானோ, அன்புமணியோ, குருவோ யாரும் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவில்லை.

2011ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவுடன் நாங்கள் பேரம் பேசுவதாகக் கூறப்படுவது உங்களது (பத்திரிகையாளர்களின்) கற்பனை தான்.

காடுவெட்டி குரு மிக மிக மிக நல்லவர். அவர் உண்மையைத் தான் பேசுவார்.

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவது என்ற முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் பாமக அளித்த ஆதரவால்தான் நிறைவேறியுள்ளது.

இது குறித்த தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. பாமக மட்டும் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், அந்தத் தீர்மானம் நிச்சயம் நிறைவேறியிருக்காது. எனவே, பாமக ஆதரவு இல்லாவிட்டால், தமிழகத்தில் மேலவை இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி என்றார் ராமதாஸ்.

பென்னாகரம்-பாமகவை ஆதரிக்க முன் வந்த அதிமுக:

கூட்டணி அமைக்க அதிமுகவிடம் இருந்து அழைப்பு வந்ததா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு இருந்த உறவு முறிந்த பின்னரே பென்னாகரம் இடைத் தேர்தல் நடைபெற்றது. எனினும், பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அதிமுக முன்வந்தது. ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி ராஜ்யசபா தேர்தலிலும் எங்களை ஆதரிப்பதாகக் கூறினர். இது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் சிலர் எங்கள் கட்சித் தலைவர்களுடன் பேசினார்கள் என்றார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, இது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்றார் ராமதாஸ்.

திமுக நிர்வாகிகளை கலந்து பேசித் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று முதல்வர் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அவரது கட்சி நிலைப்பாட்டை அவர் சொல்கிறார். என்னுடைய கட்சி நிலைப்பாட்டை நான் எடுக்க அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நாடாளுமன்றத் பாராளுமன்ற தேர்தல் தோல்வி, பென்னாகரம் தோல்வி காரணமாக உங்களது 'பார்கெய்ன் பவர்' குறைந்துவிட்டதா என்று கேட்டதற்கு, சக்தி குறைந்துவிட்டதா? அதிகரித்திருக்கிறதா? என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவதில்லை. எங்கள் கொள்கை திட்டங்கள் மற்ற கட்சிகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளன. பென்னாகரத்தில் தனித்து போட்டியிட்டு 42 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருக்கிறோம். உண்மையில் வெற்றி பெற்றது நாங்கள் தான் என்றார் ராமதாஸ்.

திமுக கூட்டணி: பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் மீண்டும் ஆலோசனை

சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறி்த்து கடந்த ஒரு வாரத்தில் 2 முறை நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிவிட்டார் ராமதாஸ்.

நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவிட்டு திமுக தலைமையை சந்தித்துவிட்டு வருவது, மீண்டும் கூட்டம் நடத்தி ஆலோசித்துவிட்டு திமுக தலைமையை சந்தித்துவிட்டு வருவது என்று போய்க் கொண்டு்ள்ளது பாமகவின் பயணம்.

இந் நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பாமக குழு நிருபர்களிடம் பேசுகையில், முதல்வரிடம் சில தகவல்களை பேசியிருக்கிறோம். அவர் கூறியதை டாக்டர் ராமதாசிடம் சொல்வோம். இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.

இதையடுத்து நிருபர்களை சந்தித்து முதல்வர் கருணாநிதி, கூட்டணி குறித்த இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று உங்களிடத்திலே அவர்கள் (பாமக குழு) சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். எங்கள் கட்சியிலும் அதைப் போல கழக முன்னணியினரோடு விவாதித்து எடுக்கின்ற இறுதி முடிவினை நான் வெளியிடுவேன் என்பதை அவர்களிடத்திலே சொல்லியிருக்கிறேன் என்றார்.

இந் நிலையில் கூட்டணி விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பாமக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் ராமதாஸ் கூட்டினார்.

சென்னை ஸ்டார் சிட்டி ஹோட்டலில் நடந்த இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிற 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி 21ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து 10ம் ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: