Thursday, March 31, 2011

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆதரிக்க வேண்டும்-ராமதாஸ்

வேதாரண்யம்: ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணிக்கு வைகோ
ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


வேதாரண்யம் ராஜாளி பூங்காவில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
வேதாரண்யம் தொகுதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது.

தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டால் நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம். ஐந்து ஆண்டு காலம் எங்கள் ஆதரவு தொடரும்.

நமக்கு எதிராக செயல்படுவது அதிமுக கட்சி மட்டும் அல்ல, தேர்தல் கமிஷனும் தான். எனக்கு கிடைத்த தகவல்படி அதிமுக ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்ய பணம் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் திமுக வெற்றி பெறும்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் நூற்று பத்து தொகுதியில் வெற்றி பெற்று விட்டது. இன்னும் ஆட்சி அமைக்க எட்டு இடங்கள்தான் தேவை, அவற்றையும் வெல்வோம் என்றார்.

பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட மதிமுகவையும், வைகோவையும் திமுக கூட்டணிக்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தோல்வி பயத்தால் ஜெயலலிதா தரம் தாழ்ந்து தனி நபர் விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் யாரும் ஈடுபடவில்லை. தன் கையில் அடிவாங்கியவர் மகாராஜா ஆவார் என்று விஜயகாந்த் கூறியிருப்பது உளறலின் உச்சக்கட்டம் என்றார்.

ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லாது:

பின்னர் திருக்கோவிலூரில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் ஒருவரும் கிடையாது. குறிப்பாக 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட பெற்றி பெறவே முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலைஞர் தலைமையில் நான், திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். இனி விழுப்புரம், திண்டிவனத்தில் பேசவிருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்
போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கலைஞர் சொன்னதை எல்லாம் ஜெயலலிதா அப்படியே சொல்கிறார்.

நான் விஜயகாந்த் பற்றி பேசியது கிடையாது. அந்த கட்சிப் பெயர் கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அவர் தான் கும்மிடிப்பூண்டியில் பேசுகையில் என்னை போராட்ட மன்னன் என்று கூறியுள்ளார். அவர் சரியாகத் தான் என்னை போராட்ட மன்னன் என்று கூறியிருக்கிறார். நான் தமிழ் மக்களுக்காகவும், மொழிக்காகவும் ஏராளமான போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.

விருத்தாசலத்தை விட்டுவிட்டு ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு அத்தொகுதி மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இந்த தொகுதி மக்கள் ஏமாறுபவர்கள் அல்ல. அதேசமயம் அவர்களை ஏமாற்றுபவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்றார்

Wednesday, March 30, 2011

ருணாநிதியை முதல்வராக்க பணியாற்றுங்கள்: ராமதாஸ்

மார்ச் 30: திமுக தலைவர் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வினரும் இணைந்து கடுமையாகத் தேர்தல் பணியாற்ற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

உளுந்தூர்பேட்டை வட்டம் மடப்பட்டு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுபை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது:

தலித் மக்களும், வன்னியர் மக்களும் மிகுதியாக உள்ள பகுதி இது. வேட்பாளர் முகமது யூசுப் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இவரை வெற்றிப் பெற செய்யவேண்டும். இந்த மாவட்டத்தில் பாமக 3 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவர்கள் வெற்றிப்பெற நானும், தம்பி திருமாவளவனும் நிற்பதாக நினைத்து இரு சமுதாய மக்களும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு தேர்தலில் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.

இந்தக் பொதுக்கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் வரவேற்றார்.

பாமக எம்.எல்.ஏ. கலிவரதன், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாவட்டத் தலைவர் தமிழ்வாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வெற்றிச்செல்வன், துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் செ.க.சேரன், திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளர் முகமது யூசுபை அறிமுகப்படுத்தி மெழுகுவர்த்தி சின்னத்துக்கும் கூட்டணிக் கட்சிகள் சின்னத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என சிறுப்புரையில் பேசினார்.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பிரதிநிதி களத்தூர் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலர்கள் மேட்டத்தூர் பழனி, தங்க.விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வேட்பாளர் முகமது யூசுப் ஏற்புரையாற்றினார். பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

திருக்கோவிலூரில்: ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியது:

நானும் திருமாவளவனும் விழுப்புரம், மடப்பட்டில் நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினோம். பின்னர் திருமாவளவன் தர்மபுரி மாவட்டத்துக்கு அவசரமாகச் சென்றுவிட்டதால் இக்கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. அதனால் உங்களோடு நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் எழுச்சியோடு இருக்கின்றீர்கள்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் யாருமே இல்லை. குறிப்பாக 41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் நானும் திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். விழுப்புரம், திண்டிவனத்தில் பேசப் போகிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்

போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கருணாநிதி சொன்னதை அப்படியே ஜெயலலிதா சொல்கிறார். விஜயகாந்த் பற்றி நான் எதுவும் பேசியது கிடையாது. அந்தக் கட்சிப் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் கும்மிடிப்பூண்டியில் பேசிய விஜயகாந்த் என்னை போராட்ட மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னதைப்போல் நான் ஒரு போராட்ட மன்னன்தான். நான் செய்த போராட்டங்கள் ஏராளம். தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக போராட்டம் செய்தேன்.

இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் ஆகியோரது வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.

விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். காரணம் இத்தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார் ராமதாஸ்.

இக்கூட்டத்துக்கு பின் பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவாக ராமதாஸ் பேசினார்.

கள்ளக்குறிச்சி: திமுக அரசு செய்த சாதனைகளால் ஏழை மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சங்கராபுரம் பூட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

தா.உதயசூரியனை ஆதரித்து ராமதாஸ் பேசியது: எந்த வேட்பாளருக்கும் இல்லாத சிறப்பு அம்சம் வேட்பாளர் உதயசூரியன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஆகும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம். 5 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது ஏழை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஆ.அங்கையற்கண்ணி, சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன், சங்கராபுரம் பாமக நகரச் செயலாளர் பபுலு, ஒன்றியச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.பாவரசை ஆதரித்துப் பேசுவதற்காக வந்தார். நேரம் 10.20 மணி ஆகிவிட்டதால் தேர்தல் விதிமுறைப்படி பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் வேட்பாளரின் கரங்களை உயர்த்தியும் மெழுகுவர்த்தி எரிந்த நிலையில் உள்ள சின்னத்தை தூக்கியபடி மக்களிடம் காண்பித்து ஜாடையில்

மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

Monday, March 28, 2011

நடிப்புக்காக கூட மரக்கன்று நடாதவர் விஜயகாந்த்: ராமதாஸ்

வேலூர்,மார்ச் 28: சினிமாவில் நடிப்புக்காக கூட மரக்கன்று நடாத நடிகர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஒடுக்கத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அணைக்கட்டு தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.கலையரசுவை அறிமுகம் செய்து வைத்து ராமதாஸ் பேசியதாவது:

தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்களே இன்றைக்கு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராவது உறுதி.

என்னை அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என நடிகர் ஒருவர் (விஜயகாந்த்) விமர்சனம் செய்து வருகிறார். என்னை கொச்சைப்படுத்துவதாக நினைத்து அப்படிப் பேசுகிறார்.

நான் அறிக்கை மன்னன்தான். சமூக விழிப்புணர்வுக்காக, அடிதட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.

மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர பிற சிறைகளைப் பார்த்தவன். என்னை என் கட்சியினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன். அதனால் என்னை போராட்ட மன்னன் என்று அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.

தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்?

பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். சினிமாவில் நடிப்புக்காக கூட அவர் மரக்கன்று நட்டதில்லை. அப்படிப்பட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

நீண்டநாள் உறங்கிவிட்டு, தேர்தல் வந்ததும் எழுந்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. அடித்தட்டு மக்களை பற்றி அறியாத அவர், எழுதிக் கொடுப்பதைப் படிக்க மட்டுமே தெரிந்தவர். அவர் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து தேர்தல் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று உணர்ந்துள்ள மக்கள், அவருக்கு நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓய்வு தர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார் ராமதாஸ்

சிறுவர்களை வைத்தே சின்னங்களை வரையலாம்: ராமதாஸ்

தருமபுரி, மார்ச் 28: தி.மு.க. கூட்டணிக் கட்சி சின்னங்களை சிறுவர்கள் கூட வரைய முடியும், அதற்காக ஓவியரைத் தேட வேண்டாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. வேட்பாளர்களாக தருமபுரியில் பெ. சாந்தமூர்த்தி, பாலக்கோட்டில் பாடி செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பென்னாகரத்தில் பி.என்.பி. இன்பசேகரன், பாப்பிரெட்டிப்பட்டியில் வ. முல்லைவேந்தன் ஆகியோர் தி.மு.க. வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்களைத தவிர விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பொ.மு. நந்தன், அரூர் தனித் தொகுதியில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறார். மேற்கண்ட 5 வேட்பாளர்களின் சின்னங்களை கிராமப்புறங்களில் வரைய ஓவியரைத் தேடுவதில் நேரத்தை செலவிட வேண்டாம் என ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தருமபுரிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் உள்ள சின்னங்களான உதயசூரியன், மாம்பழம், மெழுகுவர்த்தி ஆகியவற்றை பள்ளிக் குழந்தைகள் கூட எளிதில் வரைய முடியும்.

சிறுவர்களை அழைத்து வந்தே கிராமப்புறங்களில் சின்னங்களை வரையலாம். சிறுவர்கள் இல்லையெனில் கூட்டணிக் கட்சித் தொண்டர்களே சின்னங்களை வரைய வேண்டும் என்றார்.

Sunday, March 27, 2011

எங்களை விமர்சிக்க தே.மு.தி.க.,வுக்கு தகுதியில்லை': ராமதாஸ் எச்சரிக்கை

தர்மபுரி: ""பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஜெயலலிதா குறித்து 2009 மார்ச் 28 ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறக்கக் கூடாது. தன் கையெழுத்து இல்லையென கூறிய ஜெயலலிதாவிடம் நாட்டை ஒரு போதும் மக்கள் ஒப்படைக்கக் கூடாது என, பேசிய விஜயகாந்த், மக்களை ஏமாற்றும் வகையில் இது நாள் வரை யாருடனும் கூட்டணி இல்லையென கூறிவிட்டு, தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பல இடங்களில் தே.மு.தி.க., கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்த், பா.ம.க.,வை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.



அரசியலின் அரிச்சுவடி தெரியாத விஜயகாந்த், பா.ம.க., பற்றி விமர்சனம் செய்ய தகுதியில்லை. கேட்டு பெறும் இடத்தில் பா.ம.க., உள்ளது; கொடுக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளதால், பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய சட்டசபை தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டது. தனித்து நின்று தன் பலத்தைக் காட்டிய பென்னாகரம் தொகுதியை தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனுக்கு விட்டுக் கொடுத்ததை தி.மு.க.,வினர் நினைத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்

மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா-ராமதாஸ் கிண்டல்

பரமத்திவேலூர்: ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் கவுண்டரை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பரமத்திவேலூரில் பிரசாரம் செய்தார்.

அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,

இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அடித்தட்டு மக்களை கேட்டால் உடனே திமுக தான் என்பார்கள். அந்த அளவுக்கு திமுக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதை காப்பியடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி மக்களை ஆடு, மாடு மேய்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் கருணாநிதியோ ஏழை மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும். ஆனால் ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடுவதோடு சரி. அதை எப்பொழுதுமே நிறைவேற்றமாட்டார். திமுக அரசை பாமக எப்பொழுதும் ஆதரிக்கும். எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் திமுக அரசுக்கு உறுதுணையாக நிற்போம். எந்தகாலத்திலும் நாங்கள் அமைச்சர் பதவி கேட்க மாட்டோம் என்றார்

Friday, March 25, 2011

பொய்யின் மொத்த உருவம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: பா.ம.க., ராமதாஸ்

திண்டுக்கல்: ""பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



திண்டுக்கல்லில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் கிரைண்டர், மிக்சி தருவதாகவும், பெண்களின் திருமணத்திற்கு ரூ.30 ஆயிரமும், படிப்பிற்கு ரூ.20 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் காப்பியடிக்கும் போது, பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொள்வான். இதுமாதிரி தி.மு.க., தேர்தல் அறிக்கையை, ஜெயலலிதா காப்பியடிப்பது வெளியிட்டுள்ளார். இதை மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஏழைகளுக்கு ஆடு, மாட்டை இலவசமாக வழங்குவாராம். ஜெயலலிதா தமிழர்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். கருணாநிதி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் தந்து, நன்றாக படித்து, தமிழர்கள் உலக அரங்கில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்.



தமிழகத்தில் 30 லட்சம் பேர் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு எப்படி ஆடு, மாடு கொடுக்க முடியும். பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு, அவர் மீதே கஞ்சா வழக்கு போட்டார். ஒரே நாளில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். மீண்டும் கருணாநிதி முதல்வராக நீங்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை விதித்துள்ளது. வாகன சோதனை என்ற பெயரில் பலவித இன்னல்களுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சித்தன் எம்.பி., திண்டுக்கல் பா.ம.க., வேட்பாளர் ஜே.பால்பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, March 23, 2011

கருணாநிதி ஒரு அரசியல் தியாகி-சிறந்த ஸ்டேட்ஸ்மேன்-ராமதாஸ்

திருவாரூர்: முதல்வர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த ஸ்டேட்ஸ்மேன், அரசியல் தியாகி என்று பாராட்டினார் டாக்டர் ராமதாஸ்.


திருவாரூர் திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

கருணாநிதி, ஒரு அரசியல்வாதி அல்ல. அரசியல் தியாகி. எழுத்தாளர், கவிஞர் எல்லாவற்றுக்கும் மேலாக பகுத்தறிவாளர். அப்படிப்பட்ட கருணாநிதி, சொந்தமண்ணில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள், எங்கள் வீட்டு பிள்ளை இங்கே போட்டியிடுகிறார் என்று எல்லா வாக்குகளையும் அவருக்கு அளிக்க இருக்கின்றனர். அவரை எதிர்த்து நிற்பவர் டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை.

தேர்தலுக்கு 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் தேர்தலுக்கு மக்கள் இறுக்கமாக இருப்பார்கள். யாருக்கு ஓட்டு என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று தமிழகத்தில் உள்ள மக்கள், யாரைப் பார்த்தாலும் ஏழையாக இருந்தாலும், நடுத்தரமக்களாக இருந்தாலும், வசதி படைத்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களைக் கடந்து தி.மு.க. கூட்டணிக்குத்தான் ஓட்டு என்கின்றனர்.

இது போன்ற நிலைமை எப்போதும் இருந்ததில்லை. 20 நாட்கள் இருக்கின்ற நிலையிலே இப்படி என்றால் நாளாக, நாளாக ஒட்டு மொத்த தமிழகத்தில் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க தயாராகி விடுவார்கள். பா.ம.க. கருணாநிதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

20 ஆண்டு கனவு நனவாகிவிட்டது: ராமதாஸ் மகிழ்ச்சி

சேலம்: பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றாக கைகோர்த்து ஒரு அணியில் இருக்கிறது. 20 ஆண்டு கனவு தற்போது தான் நனவாகியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது,

முதல்வர் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்களே விரும்புகின்றனர். எங்கு திரும்பினாலும் இதைப் பற்றிய பேச்சு தான். அதற்கு காரணம் திமுக தேர்தல் அறிக்கை. தேர்தல் அறிக்கையின் நாயகன் முதல்வர் கருணாநிதி தான். அவர் ஒரு வெற்றித் திருமகன்.

இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது எல்லாம் நிறைவேற கருணாநிதியையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி வெறுவோம்.

திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நம்முடன் விடுதலை சிறுத்தைகள் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது. இந்த இரண்டு கைகளையும் யாராலும் பிரிக்க முடியாது. 20 ஆண்டு கனவு தற்போது நனவாகியுள்ளது.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் பணியாற்றி வருவதால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வெற்றி வாய்ப்பு தான் பிரகாசமாக இருக்கிறதே என்று இருந்துவிடக் கூடாது. வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்க வேண்டும். இந்த வாக்காளரை நான் 18 தடவை பார்த்து விட்டேன், 20 தடவை பார்த்து விட்டேன் என்று சொல்லும் வகையில் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் மனதை மாற்ற வேண்டும்.

பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் அரவணைத்து தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். நாம் நிற்கும் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் 100 மடங்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமகவினருக்கு கட்டளையிட்டிருக்கிறேன். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Monday, March 21, 2011

2011 தேர்தல் வாக்குறுதி - பா.ம.க.

சென்னை, மார்ச் 21: பா.ம.க. வெற்றி பெற்றால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ.1,500 நிதி உதவி வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மாதம்தோறும் நிதி உதவி வழங்கப்படும். குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவோர், பிறந்தது முதல் 6 வயது வரை இலவச தடுப்பூசி போடுவோர், சொட்டு மருந்துகள் அளிப்போர், மருத்துவப் பரிசோதனைகள் செய்வோர், கர்ப்பிணிகள் எனில் உரிய தடுப்பூசிகள், மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

தனியார் துறை, அரசுசாரா அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சட்டப் பேரவைத் தொகுதி நீடித்த வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்மயமாக்குதல், வேளாண்மை வளர்ச்சி, அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டல் தொழில்களை வளர்த்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: வேளாண் துறைக்கு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த பா.ம.க. துணை நிற்கும். மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பா.ம.க. குரல் கொடுக்கும்.

நீதித் துறையில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பையும், கிரீமி லேயரையும் நீக்குதல், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள தேவையான சட்ட திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக பா.ம.க. பாடுபடும். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை சமூகநீதி நாளாக அறிவிக்க குரல் கொடுப்போம்.

தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: இட ஒதுக்கீடு வழங்குவதில் மதம் ஓர் அடிப்படையாகக் கருதப்படக் கூடாது என்கிற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும். வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

பள்ளிக் கல்வியை அரசே வழங்க வேண்டும்: அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதுபோல பள்ளிக் கல்வியானது முழுக்க முழுக்க அரசினால் நடத்தப்படும் நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். பொதுப் பள்ளி முறை, அருகாமை பள்ளி முறை கொண்டு வரப்படும்.

6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பது 3 முதல் 14 வயது வரை என்று மாற்றியமைக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தொடக்கக் கல்விக் துறையை பிரித்து தனித் துறை உருவாக்கப்படும். பள்ளிகளில் தமிழ் இசை ஒரு பாடமாக சேர்க்கப்படும். நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.

தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரி: தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்தப்படும். தொழிற்கல்வி நிறுவனங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரியும், ஒன்றிய அளவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், மாவட்டம்தோறும் தமிழிசைக் கல்லூரியும் தொடங்கப்படும்.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் பா.ம.க. பாடுபடும். ஒரே தடுப்பூசி மூலம் பல நோய்களைத் தடுக்கும் கூட்டுத் தடுப்பூசி முறை கொண்டு வரப்படும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 15 சதவீத இலவச சிகிச்சை அளிக்க உறுதி செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.100 கோடியில் தனி சுழல் நிதி உருவாக்கப்படும். பூரண மதுவிலக்கை செயல்படுத்துவது பா.ம.க.வின் தலையாய நோக்கமாக இருக்கும். குட்கா, பான் மசாலா, மெல்லும் வகை புகையிலை பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும். சென்னை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும்.

புதிய மாவட்டங்கள்: 6 எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் பனை மரங்கள் நடப்படும். உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே பனை மரத்தை வெட்ட முடியும் என்கிற சட்டம் கொண்டு வரப்படும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். மீனவர்களின் உயிர், படகு, கட்டுமரங்களை ஒட்டுமொத்தமாக காப்பீடு செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். மீன் பிடிக்கத் தடை இருக்கும் காலங்களில் மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை: அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்ற அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். வணிகர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 2 லட்சம் சிறு வணிகர்களுக்கு ரூ.50 கோடி கடன் வழங்கப்படும். சென்னை மாநகரில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ளது போல பேருந்து விரைவுப் போக்குவரத்து முறை கொண்டு வரப்படும்.

அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை 20 ஆண்டுகளாக குறைக்க வழிவகை செய்யப்படும்.

சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் தமிழை கொண்டுவர வழிவகை செய்யப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்

படும்.

தமிழ் ஈழமே தீர்வு: இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும். கடைசி கட்ட போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், கச்சத் தீவை மீட்கவும் பா.ம.க. பாடுபடும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி தலைமையில் புதிய அரசு அமைய நிபந்தனைகளற்ற ஆதரவு -ராமதாஸ்

சென்னை: ""கருணாநிதி தலைமையில் புதிய அரசு அமைய நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்போம். இந்த ஆதரவு, ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் அளித்த பேட்டி:பூரண மதுவிலக்கு எங்களின் மூச்சு. இதை வலியுறுத்தி, 32 மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தியுள்ளோம். இதில், இரண்டாயிரம் முதல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த தி.மு.க., தலைமையில் அரசு அமைந்தால் வலியுறுத்துவோம். அதற்கான எங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.சென்னை அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் துணைநகரம் உருவாக்குவதை வரவேற்போம். "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தால் தி.மு.க., கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிறுத்தி, எதிர் அணி செய்யும் பிரசாரத்தை முறியடிக்க தனித் திட்டம் வகுத்துள்ளோம்.



ஏழைகளுக்கு இலவசங்கள் அளிப்பதை குறை கூறுபவர்கள் முதலாளிகளுக்கு வரிவிலக்கு அளிப்பதையும், பொருளாதார மண்டலங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு வரிவிலக்கு வழங்குவதையும் இலவசமாகக் கருதி கண்டிக்க வேண்டும்.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. எனவே, அது பற்றிய பேச்சே எழவில்லை.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்குபா.ம.க.,வில் மீண்டும் வாய்ப்பு

திண்டிவனம்:பா.ம.க.,வில் தற்போதைய 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை; ஏழு பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன், இளவழகன், ராஜா, எதிரொலி மணியன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஓமலூர் தமிழரசு ஆகியோருக்கு மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் செந்தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம் சக்தி கமலாம்பாள், திருப்போரூர் மூர்த்தி, முகையூர் கலிவரதன், பூம்புகார் பெரியசாமி, தர்மபுரி வேலுச்சாமி, தாரமங்கலம் கண்ணையன், எடப்பாடி காவேரி, பவானி ராமநாதன், கபிலர்மலை நெடுஞ்செழியன், காவேரிப்பட்டினம் மேகநாதன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, தொகுதி சீரமைப்பு, தொகுதியில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பாக முடிவெடுத்ததாக பா.ம.க., தரப்பில் கூறப்படுகிறது.

பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்

http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=3249&cat=31

Sunday, March 20, 2011

வெற்றித் திருமகள்: திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாமக கருத்து

சென்னை, மார்ச் 20: திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் வெற்றித் திருமகள் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.

இது குறித்து தினமணி நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:

2006-ல் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்று போற்றப்பட்டது. திமுக ஆட்சி அமைக்க இந்த தேர்தல் அறிக்கைதான் காரணமாக அமைந்தது. ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, விவசாய கடன் தள்ளுபடி என்று அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக நிறைவேற்றியுள்ளது.

இப்படி சொன்னதை செய்ததோடு மட்டுமல்ல கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் என்று சொல்லாததையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

முதல்வர் கருணாநிதி "கதாநாயகி' என்று வர்ணித்துள்ள இந்த தேர்தல் அறிக்கையில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் ரூ. 4 லட்சம் கடன், கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்பது, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

2006 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தேர்தல் அறிக்கை வெற்றியைத் தேடித் தரும் வெற்றித் திருமகளாகும் என்றார் ஜி.கே. மணி

Saturday, March 19, 2011

மேலும் 15 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 19: மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தலைவர் ஜி.கே. மணி சனிக்கிழமை வெளியிட்டார்.

அதன் விவரம்:

ஓமலூர் - அ. தமிழரசு, பர்கூர் - தி.க. ராசா, புவனகிரி - த. அறிவுச்செல்வன், காஞ்சிபுரம் - போ.ச. உலகரட்சகன், எடப்பாடி - மு. கார்த்திக், பவானி- கா.சு. மகேந்திரன், பரமத்திவேலூர் - சி. வடிவேல் கவுண்டர், கும்மிடிப்பூண்டி - கே.என். சேகர், பூம்புகார் -க. அகோரம், செஞ்சி - அ. கணேஷ்குமார், பாலக்கோடு - பாடி வெ. செல்வம், தருமபுரி - பெ. சாந்தமூர்த்தி, திண்டிவனம் (தனி) - மொ.ப. சங்கர், திண்டுக்கல் - ஜே. பால்பாஸ்கர், வேளச்சேரி - மு. ஜெயராமன்.

இதுவரை மயிலம், வேதாரண்யம் தவிர 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

Friday, March 18, 2011

திமுக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்-ராமதாஸ்

சென்னை: திமுக கூட்டணியின்வெற்றிக்காக கடுமையாக உழைப்போம். கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வருவார் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.


சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,

பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக போராடும் பாமகவும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் ஓரணியில் இருந்து போட்டியிடுவதில் மகிழ்ச்சி. போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக இரண்டு கட்சிகளும் பாடுபடும்.

கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.

ராமதாசுடன் பெஸ்ட் ராமசாமி ஆலோசனை:

திமுக கூட்டணி வெற்றிக்கு எவ்வாறு திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனருடன் ஆலோசனை நடத்தியதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற எவ்வாறெல்லாம் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசுடன் ஆலோசனை நடத்தினோம். திமுக கூட்டணி வோட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நாங்கள் ஒன்றாக சேர்ந்து உழைப்போம். கலைஞர் 6-வது முறையாக முதல்வராக நாங்கள் பாடுபடுவோம் என்றார்.

கருணாநிதியிடம் ஜெ.குரு, ஜி.கே.மணி வாழ்த்து:

வரும் தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் பாமக சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 18- பாமக வேட்பாளர்களின் முதல்கட்டப் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.


திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 13 வேட்பாளர்களின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. மேட்டூர் - ஜி.கே. மணி


2. ஜெயங்கொண்டம் - ஜெ. குரு


3. நெய்வேலி - தி. வேல்முருகன்


4. சோழவந்தான் (தனி) - மு. இளஞ்செழியன்


5. ஆலங்குடி - க. அருள்மணி


6. கோவில்பட்டி - கோ. ராமச்சந்திரன்


7. அணைக்கட்டு - எம். கலையரசு


8. திருப்போரூர் - திருகச்சூர் கி. ஆறுமுகம்


9. போளூர் - கோ. எதிரொலி மணியன்


10. ஆர்க்காடு - கே.எல். இளவழகன்


11. ஜோலார்பேட்டை - கோ. பொன்னுசாமி


12. செங்கல்பட்டு - வ.கோ. ரங்கசாமி


13. மதுரவாயல் - கி. செல்வம்

Sunday, March 13, 2011

தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு மட்டும் தான் : ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் : ""தி.மு.க., கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் எதுவுமில்லை; நாங்கள் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்துள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ""இந்த நேர்காணலில் தலைவர் மணி இல்லை. அவர், சென்னையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து தி.மு.க., வுடன் பேசி வருகிறார். காலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்து விட்டோம். இப்போது மதுரை மாவட்டம் நடக்கிறது,'' என்றார்.



பின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:



கேள்வி: பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படுமா?
10 சதவீதம் பெண்கள் தான் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தொகுதி ஒதுக்கீடு, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு சீட் ஒதுக்கப்படும். வேட்பாளர்களாக புதுமுகங்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இருக்கும்படி முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம்.



கேள்வி: நீங்கள் எத்தனை தொகுதி எழுதிக் கொடுத்துள்ளீர்கள்?
நிறைய தொகுதிகள் எழுதிக் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் முடியும். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.



கேள்வி: தேர்தல் காலத்தை நீட்டிக்கவில்லையே?
தேர்தல் காலத்தை, தேர்தல் கமிஷன் நீட்டிக்கவில்லை என்றாலும், தேர்தலை சந்திக்க பா.ம.க., தயாராக உள்ளது.



கேள்வி: தேர்தல் பிரசாரம் எப்போது துவக்குகிறீர்கள்?
தொகுதிகள் உடன்பாடு ஏற்பட்டவுடன்,தேர்தல் பிரசாரம் துவங்குகிறேன். முக்கிய நகரங்களில் கூட்டணியின் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடக்கும்.



கேள்வி: எதை முன்னிறுத்தி பிரசாரம் இருக்கும்?
பா.ம.க.,வின் கொள்கைகள், கருணாநிதியின் ஐந்த ஆண்டு கால சாதனைகள், தொடரும் சாதனைகள் குறித்த பிரசாரம் செய்வோம். குறிப்பாக கருணாநிதி ஆட்சியின் "இனியவை நாற்பது' குறித்து பிரசாரம் செய்வோம். தேவைப்பட்டால் எதிரணி ஆட்சியின் "இன்னா நாற்பது' குறித்தும் பிரசாரம் செய்வோம். ஒவ்வொரு குடும்பமும் கருணாநிதி ஆட்சியில் பயன் பெற்றுள்ளதை உணர்கின்றன. எனவே எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்.



கேள்வி: தி.மு.க., கூட்டணியில் குறைந்த பட்ச செயல் திட்டம் உள்ளதா?
விரைவில் பா.ம.க.,தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். குறைந்தபட்ச செயல் திட்டம் இல்லை. தி.மு.க.,வுடன், பா.ம.க.,தொகுதி உடன்பாடு தான் செய்துள்ளது.



கேள்வி: விலைவாசி உயர்ந்துள்ளதே?
மழைக்காலத்தில் பொருட்களின் விலை சற்று உயரத் தான் செய்யும். தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் குறைந்து வருகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



மகத்தான வெற்றி அன்புமணி பேட்டி : "பா.ம.க., உள்ள தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.



தைலாபுரம் தோட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : இந்த தேர்தலில் பென்னாகரம் பார்முலாவை செயல்படுத்த உள்ளோம். மைக்ரோ பார்முலாவும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 60 சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்து, ஒரு ஆண்டுகாலமாக பணி செய்து வருகிறோம்; கட்சி பணி நன்றாக உள்ளது.இந்த தேர்தலில் பா.ம.க., இடம்பெற்றுள்ள தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும்.இவ்வாறு அன்புமணி கூறினார்

Wednesday, March 9, 2011

பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: ""தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற முடிவு இன்று அல்லது நாளை தெரிந்து விடும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



சென்னையில் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., போன்ற மருத்துவ மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் வேளையில், சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை கண்டித்து தமிழ் மாணவர்கள் சங்கம் சார்பில் நாளை (இன்று) முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தாசில்தார், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. சமூக நீதிக்கு நுழைவுத் தேர்வு வேட்டு வைத்து விடும்.



இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த மாணவர்களும் முன்வர வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த முடியாது என்று சொல்லியிருந்தாலும், எந்த ஆண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்த கூடாது. அப்படி நடத்தினால், கடுமையான விளைவுகள் நடக்கும். போராட்டம் நடத்தப்படும். எந்த தேதியில் போராட்டம் என்பதை விரைவில் அறிவிக்கப்படும்.



சட்டக் கல்லூரி மாணவர்கள் படித்து தேர்வு பெறுகின்றனர். அவர்கள் வக்கீலாவதற்கு மறுபடியும் தேர்வு எழுதுவது தேவையற்ற ஒன்று. தமிழக வக்கீல்கள் தேர்வு எழுதாமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற பொதுவான நன்மை கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்துள்ளோம். இரு கட்சிகளுக்கிடையே தேர்தல் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட பின் திருத்தம் செய்வது இதுதான் முதல் முறை. காங்கிரஸ் - தி.மு.க., தொண்டர்கள் இணைந்து செயல்படுவர். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த முடிவு இன்று (நேற்று) இரவு அல்லது நாளை தெரிந்து விடும். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் மாறலாம். மாறாமலும் இருக்கலாம். பா.ம.க., தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. தேர்தல் பிரசாரம் குறித்து முதல்வர் தலைமையில் பேசுவோம். அப்போது அவர் வழிகாட்டுவார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Monday, March 7, 2011

மருத்துவம் படிக்க பொது நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 7: மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற முடிவை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

"எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி. முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை மத்திய, மாநில அரசுகள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அரசியல்சட்ட அமர்வுக்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற வேண்டும். வரும் கல்வியாண்டில் இதனை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது.

உயர் கல்வியில் மாணவர்களை எந்த முறையில் சேர்ப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது ஆபத்தானது. அரசின் கொள்கை முடிவாகக் கருதி இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு நீதிமன்றங்கள் விட்டுவிடுவதுதான் சமூக நீதியாகும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாட திட்டம், சமச்சீரான கல்வி, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும்.

1950-களில் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து வந்தபோது, தமிழகமெங்கும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடியதால் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதைப்போல, பொது நுழைவுத் தேர்வு என்ற இந்த ஆபத்தையும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும், இதில் அரசியல் கூடாது.

தொகுதிகள் குறைப்பில்லை: பாமக

சென்னை, மார்ச் 7: பாமகவுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் குறைக்கப்படுவதாக வெளியான செய்திகளை அந்தக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி மறுத்துள்ளார்.

திமுக அணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸýக்கு 60 தொகுதிகளை ஒதுக்க திமுக ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சி 63 தொகுதிகளை கேட்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகியது. இதற்கான ராஜிநாமா கடிதங்களை அளிப்பதற்கு முன்பாக, காங்கிரஸ் தலைமை திமுகவுடன் பேசியது. ராஜிநாமா நடவடிக்கை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பாமகவுக்கு அளிக்கப்பட்ட 31 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் பறிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பாமக தேர்தல் குழு சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியது:

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

நடத்தியுள்ளோம். தொகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருந்தது என்றார் ஜி.கே.மணி.

தொகுதிகள் குறைப்பில்லை: காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதற்காக பாமகவுக்கு கொடுத்துள்ள 31 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் குறைக்கப்படுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மணி, அதுபோன்று தொகுதிகள் ஏதும் குறைக்கப்படாது என்றார்.

Sunday, March 6, 2011

பா.ம.க.,வில் புதுமுகங்களுக்கு "சீட்' : 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு "கல்தா' உறுதி

சட்டசபை தேர்தலில், புதுமுகங்களுக்கு சீட் கொடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளது. அதனால், 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு, "கல்தா' கொடுக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.,வுக்கு, 31 சீட் வழங்கப்பட்டுள்ளது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


தொகுதி விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, தி.மு.க., குழு ஒப்புதலுடன் பா.ம.க., போட்டியிடும், 31 தொகுதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். அதில், 60 சதவீதம் பா.ம.க., தேர்வு செய்த தொகுதிகளும், மீதமுள்ள, 40 சதவீதம், கூட்டணி தலைமை என்ற முறையில் தி.மு.க., ஒதுக்கீடு செய்த தொகுதிகள் அடங்கும். அதன்பின், நிர்வாகக்குழு கூடி, பா.ம.க., வேட்பாளர்களை முடிவு செய்ய உள்ளது.


பா.ம.க., சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய, சமீபத்தில் கல்லூரி மாணவர்களை கொண்டு, "சர்வே' நடத்தப்பட்டது. அன்புமணி ஆளுகைக்கு உட்பட்டு நடத்தப்பட்ட சர்வேயில், "தோழமை கட்சிகளோடு ஒருங்கிணைப்பு இல்லாமை, பொதுமக்களின் மத்தியில் அவப்பெயர் மற்றும் சொந்த கட்சியினர் மத்தியில் இணக்கமான உறவு இல்லாமை' போன்ற அசாதாரண சூழலுக்கு காரணமான எம்.எல்.ஏ.,க்கள் யார் என இனம் காணப்பட்டது.


அதன் அடிப்படையில், சிட்டிங் எம்.எல்.ஏ., 12 பேர் மீது பாதகமான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, வரும் தேர்தலில், சிட்டிங் எம்.எல்.ஏ., 18 பேரில், ஆறு பேருக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்க, பா.ம.க., தலைமை பரிசீலனை செய்து வருகிறது. மணி, வேல்முருகன், நெடுஞ்செழியன், ஆறுமுகம், இளவழகன், மூர்த்தி ஆகியோருக்கு மீண்டும் எம்.எல்.ஏ., சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.


மீதமுள்ள, 25 தொகுதிகளில் புதுமுகங்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு சீட் வழங்க, ராமதாஸ் ஆலோசித்து வருகிறார். வரும் தேர்தலில், சீட் ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், அன்புமணிக்கு நெருக்கமான மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படலாம் என, பா.ம.க., முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கடந்த முறை, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் வகிக்கும் மாவட்ட செயலர், ஒன்றிய, நகர செயலர் உள்ளிட்டோர், சீட் கேட்டு விருப்ப மனு செய்திருந்தனர். தற்போதும், விருப்ப மனு செய்துள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக, பா.ம.க., கேட்கும் தொகுதிகளில், 60 சதவீதம் மட்டும் கொடுக்க தி.மு.க., முன்வந்துள்ளது.


சேலத்தில் 2 தொகுதி: சேலம் மாவட்டத்தில் பா.ம.க.,வுக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள இடைப்பாடி தொகுதியுடன் புதிதாக சேலம் மேற்கு தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது.


மேட்டூர், ஓமலூரில் பா.ம.க.,வை தோற்கடிக்க, அக்கட்சியினரே உள்ளடி வேலையில் இறங்கி உள்ளதாக தலைமைக்கு தகவல் எட்டியுள்ளது. எனவே, மணி தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு தொகுதிகள் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர்.


-

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தொடரும்' : ஜி.கே.மணி

சென்னை : ""காங்., அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை,'' என்று பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அறிவாலயத்தில், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். அதன் பின், ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறும்போது, ""காங்., தலைமையிலான ஜக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., தொடர்கிறது. சட்டசபை தேர்தலில் முழுமையான வெற்றியை இக்கூட்டணி பெறும்,'' என்றார்

Friday, March 4, 2011

மும்மடங்கு உற்சாகத்துடன் திமுக கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம்-பாமக

திண்டிவனம்: திமுக கூட்டணியின் வெற்றிக்காகவும், முதல்வர் கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்கவும் மும்மடங்கு உற்சாகத்துடன் பணியாற்றுவோம் என்று பாமக கூறியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களில் சில..,

- தமிழகத்தில் நடைபெறும் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பாமகவினர் தேர்தல் ஆணையத்திற்கு தந்திகளை அனுப்பிட வேண்டும்.

- தேர்தல் எப்போது நடந்தாலும், முதல்வர் கருணாநிதியை, 6வது முறையாக முதல்வர் பதவியில் அவரை அமர்த்த உறுதி பூண்டுள்ளோம்.

- திமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு மும்மடங்கு உற்சாகத்துடன், வேகத்துடன் பணியாற்றுவோம்.

- பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இரு சமூக மக்களுக்கிடையிலான ஒற்றுமையை அதிகரிக்க உதவும்.

- தமிழகத்தில் சமூக நீதி தழைக்கவும், சமச்சீர் கல்வி நிலைக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். அரசின்நலத் திட்டங்களுக்கு துணை நிற்போம்.

- ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிட வேண்டும்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: