Monday, May 30, 2011

புகையிலையை எதிர்த்து போராட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை, மே.30: புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

2008-ம் ஆண்டு அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையார செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன் புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்

சென்னை:"சமச்சீர் கல்வி தொடர வேண்டும்' என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.



இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. அக்குறைகளை, படிப்படியாக சரிசெய்வது தான் முறை. சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது, வளரும் கன்றை முளையிலேயே வெட்டுவதற்கு சமம்.சமச்சீர் கல்வி குறித்து பரிந்துரைக்க, புதிய வல்லுனர் குழு அமைக்கப்படும் என்பது காலம் தாழ்த்தும் செயல். இதன்மூலம், தனியார் பள்ளி முதலாளிகளின் நிர்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.



அரசின் முடிவால், 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட 9 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பழைய பாடத் திட்டத்தின்படி, புத்தகங்கள் அச்சடிக்க கால தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படும். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்துள்ள நிலையில், சமச்சீர் கல்வி முறையைக் கைவிடுவது, மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.மாணவர்களின் நலன் கருதி, பாகுபாடு இல்லாத கல்வியை அளிக்க சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வி ஆண்டு முதலே நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Saturday, May 14, 2011

பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை, மே 14- பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இன்று மாலை, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.


அறிக்கையில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:


ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும்.


பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.


பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, May 10, 2011

தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை:"தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதேபோன்று தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களில் சிலர், பாடவாரியாக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன்தான், தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதே அளவுகோலை, பாடவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் பின்பற்றாதது, தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய போக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதனால், தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற பாரதியாரின் வார்த்தைகள் மெய்யாகி விடும் ஆபத்து உள்ளது.இப்படிப்பட்டதொரு நிலை ஏற்பட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படித்து, செம்மொழியாம் தமிழ் மொழி செழித்து வளர வழி பிறக்கும்.

இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, தமிழை கட்டாயப்பாடமாக்குவது தான். தமிழ் மொழிப் பாடத்தை ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு வகுப்புக்கு கட்டாயப் பாடமாக நீட்டித்து வருவதற்குப் பதில், அனைவரும் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Wednesday, May 4, 2011

பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறது. இதையொட்டி பல விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது.

விருது பெறுபவர்கள் விவரம்,

அம்பேத்கர் சுடர் விருது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெரியார் ஒளி விருது - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்

காமராசர் கதிர் விருது - மூத்த எழுத்தாளர் சோலை

அயோத்திதாசர் ஆதவன் விருது- பவுத்த பெரியார் சுந்தரராசன்(மறைவு)

காயிதே மில்லத் பிறை விருது - பேராசியிரியர் காதர் மைதீன்

செம்மொழி ஞாயிறு விருது - கவிஞர் தணிகைச் செல்வன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படையின் அத்துமீறல்

அமெரிக்கப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை சுட்டுக் கொன்றது அத்துமீறிய செயலாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது அமெரிககாவின் அரச பயங்கரவாதம். இன்னொரு நாட்டில் நுழைந்து அதன் இறையாண்மையில் தலையிடும் அமெரி்க்காவை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டோனிக்கு எதிராக பசுமைத் தாயகம் ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது

சென்னை, மே 4- கிரிக்கெட் வீரர் டோனி மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


இத்தகவல் பசுமைத் தாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் சேமியர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐசிடிஇ முடிவுக்கு ராமதாஸ் எதிர்ப்பு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி ஏஐசிடிஇ பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஏஐசிடிஇ வகுத்துள்ள புதிய நெறிமுறைப்படி பொறியியல் கல்லூரிகளில் சேர, பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியலினம், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அவர்களை முன்னேற விடாமல் கீழே தள்ளும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரான இந்த ஆணை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.


தமிழக மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தொடரும் என்று அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றி.


மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

Tuesday, May 3, 2011

புதிய கல்வி கட்டணம்: மீறும் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: புதிய கல்வி கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கல்விக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை பள்ளிகளை திறக்கமாட்டோம் என்றும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இது அரசுக்கு சவால் விடுக்கும் செயலாகும்.

அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் கட்டமாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். இது காலப்போக்கில் களையப்பட வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான முயற்சியில் அரசுக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்களது விருப்பம் போல கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும், சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம் போலத் தான் செயல்படுத்துவோம் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது அனைவருக்கும் தரமானகல்வி வழங்கும் முயற்சி என்ற கற்பக மரக்கன்றை வளர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுவதற்கு பதில், வெந்நீர் ஊற்றி அழிக்கும் செயல்.

தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மாநில அரசு செய்யவேண்டும். கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு உடனடியாக வெளியிட வேண்டும். அக்கட்டணம் ஏழைகளாலும் செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லையென்றால் அவற்றுக்கு அரசின் நிதி உதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி தர வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Monday, May 2, 2011

புதிய பள்ளிக் கட்டணத்தை உடனே வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை : "நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை உடனே வெளியிட்டு, அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ள சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்யும் வரை, பள்ளிகளை திறக்க மாட்டோம். சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால், அக்கல்வி முறையை, நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளது, அரசுக்கு சவால் விடும் செயலாகும்.


அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்க வேண்டும் என்ற உன்னதநோக்கின், முதல் கட்டமாக தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு, கல்வி தரும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதை காலப்போக்கில் களைய வேண்டும்.


ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்கள் விருப்பம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளின் இம்முயற்சியை முறியடிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.


கட்டண உயர்வு கோரி மேல் முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை, நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, விரைவில் வெளியிட வேண்டும். அக்கட்டணம், ஏழை மக்களால் செலுத்தப்படும் வகையில் அமைய வேண்டும். இதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: