Saturday, March 31, 2012

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ , ராமதாஸ்

சென்னை: மின்சார கட்டண உயர்வ திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ மற்றும் ராமதாஸ் ஆகிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறுகையில், "மின் கட்டண உயர்வு குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காகவே நடத்தப்பட்டது என்பது இப்போது புலனாகிறது.

தமிழ்நாட்டில் சராசரி நடுத்தரக் குடும்பங்களின் மின்சார நுகர்வு இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் ஆகும். தற்போதைய கட்ட ணம் 201 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ. 2.20. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75. இதற்கு அரசு மானியமும் கிடையாது.

எனவே இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் பயன் படுத்தும் சராசரிக் குடும்பம் மின் கட்டணமாக ரூ. 2,130 அதிகம் செலவிட வேண்டும். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழக மக்கள் தலையில் பேரிடியாகத் தாக்கி உள்ள மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.7,874 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழக மக்களின் தலையில் தாங்க முடியாத சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்திற்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை சரிசெய்யவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இழப்புகளை ஈடுசெய்ய மக்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஏற்கனவே மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள், இந்த கட்டண உயர்வால் அடியோடு முடங்கி, ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும். மின்கட்டண உயர்வின் தொடர் விளைவுகளால் விலைவாசியும் கடுமையாக உயரும். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வை எதிர்த்து டெல்லியில் உள்ள மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, March 28, 2012

2016ல் பா.ம.க. ஆட்சி! டாக்டர் ராமதாஸ் பேச்சு!

சென்னை வேளச்சேரி பகுதி பா.ம.க. சார்பில் புதிய

அரசியல் புதிய நம்பிக்கை' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் எல்லா பொருட்களும் 60 சதவீதம் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை மட்டும் 10 சதவீதம் தான் உயர்ந்து உள்ளது.


தமிழகத்தில் இலவச அரிசி தரவேண்டும் என்பதால் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்திற்கு அரசு எந்தவித முன்னுரிமையும் வழங்காததால் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன.


இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு என்ற பெயரில் வீடுகள் கட்டி அவை தமிழர்களை விட சிங்களர்களுக்கு தான் வழங்கப்படுகின்றன. நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பா.ம.க. பல திட்டங்களை வைத்து உள்ளது.


தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உள்ளது. கூடங்குளத்திலும் முதற்கட்டமாக 640 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடியும். இது பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். 2016 ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி ஏற்படும். இனி யாருடனும் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பா.ம.க.வினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்

Sunday, March 25, 2012

காவிரியில் மீண்டும் கர்நாடகம் விஷமம்... அனைத்துக் கட்சிக் கூட்டம் கோருகிறார் ராமதாஸ்

சென்னை: காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசும், அந்த மாநில விவசாயிகளும் மீண்டும் தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதால் இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகளையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, அடுத்த கட்டமாக தமிழக உழவர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், நீர் மின் உற்பத்தி செய்யவும் வசதியாக மேகதாது என்ற இடத்தில் 60 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.

இது கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் விட பெரியதாகும். மேட்டூர் அணையில் மூன்றில் இரண்டு பங்கு கொள்ளளவு கொண்டதாகும்.

இந்த அணை கட்டப்பட்டால் மழைக்காலங்களில் தமிழ்நாட்டிற்கு கசிந்து வரும் வெள்ள நீர்கூட காவிரி ஆற்றில் வராத நிலை ஏற்பட்டு விடும். இதனால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். புதிய அணை கட்டுவது ஒருபுறம் இருக்க, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி கர்நாடக அணைகளில் உள்ள காவிரி தண்ணீரைப் பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் கோடை சாகுபடி செய்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை அம்மாநில விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டால், தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்படும். இதனால் காவிரி தண்ணீரை நம்பியுள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் கோடை சாகுபடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதால், ஆத்திரமடைந்துள்ள கர்நாடக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர்கூட தரக்கூடாது என்று போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவும் அவர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இத்தகைய சூழலில் காவிரி பாசன விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. கர்நாடக அரசின் விதி மீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ள போதிலும், அரசியல் ரீதியிலான அழுத்தங்களையும் தந்தால்தான் காவிரி ஆற்று நீரில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், அத்தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் இன்றுவரை வெளியிடப்படவில்லை. எனவே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து விவாதிக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, March 24, 2012

பெரிய மாவட்டங்களை பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: ""தமிழகத்தில் வட மாவட்டங்கள் அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளது. இதற்கு நிர்வாக வசதி இல்லாதது காரணமாகும். அதனால், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள நீரை கோடை காலத்தில் விவசாயிகள் பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும், கர்நாடகா விவசாயிகள் கோடை காலத்திலும் அணை நீரை கொண்டு விவசாயம் செய்வது நியாயமானது என, கர்நாடகா முதல்வர் கூறுகிறார்.ஆற்று நீர் பிரச்னையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள் அண்டை மாநிலத்திடம் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்து விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007ம் ஆண்டு வெளியானாலும் கூட, தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட தற்போதுள்ள தமிழக அரசும், இதற்கு முன் ஆண்ட தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் உதயகுமாரை தமிழக அரசு நம்ப வைத்து ஏமாற்றி விட்டதுடன் அவர்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகிறது. தற்போது அணு உலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உடனடியாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் மேற்கொண்டு அணு உலையை எதிர்த்து போராட முடியும்.தமிழகத்தில் வட மாவட்டங்கள் அனைத்து நிலைகளிலும் பின் தங்கியுள்ளது. இதற்கு நிர்வாக வசதி இல்லாதது காரணமாகும். அதனால் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை, நிர்வாக வசதி கருதி பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையில் ஒன்றாக சேர்ந்து இருந்தால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. தனி ஈழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகும். தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டுமே, தனி ஈழத்தை பற்றி பேசுவார். ஆளும் கட்சியாக இருக்கும் போது அதை பற்றி பேசமாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

இனி வரும் தலைமுறைதான் முக்கியம்: அன்புமணி

சேலம்:""பா.ம.க.,வுக்கு அடுத்த தேர்தல் முக்கியமில்லை; அடுத்து வரும் தலைமுறை தான் முக்கியம்,'' என, சேலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.
சேலத்தில் நடந்த பா.ம.க., மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் பா.ம.க., அன்புமணி பேசியதாவது:தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி, பா.ம.க., மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சி, ஆட்சி செய்து முடித்து விட்ட கட்சி அடுத்த தேர்தலுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும்.

பா.ம.க.,வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் சிந்தனை.தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் என்ன செய்தன. சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம்.

தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும்?
தற்போது வருமானமே டாஸ்மாக் மட்டுமே, அதை வைத்து இந்த நிதியை திரட்ட முடியுமா. பா.ம.க., மது, சினிமா கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில், கரடு முரடான பாதையை கடந்து வந்து விட்டது. தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., போன்றவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான் அதிகம் உள்ளனர்.கேப்டன் என்கின்றனர்; அவர் புட்பால் கேப்டனா, வாலிபால் கேப்டனா, ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கெல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். தமிழகத்தில், பா.ம.க., இலவசத்தை ஒரு போதும் ஆதரிக்காது. விதிவிலக்காக கல்வி, சுகாதாரம், வேளாண் விளைபொருட்களை இலவசமாக வழங்க மட்டுமே அனுமதிக்கும். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்காகத் தான் இருக்கும்.இவ்வாறு அன்புமணி பேசினார்.இந்தக் கூட்டத்தில் பா.ம.க., தலைவர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, March 23, 2012

மாதிரி நிதிநிலை பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சி

தமிழக அரசின் 2012-2013-ம் ஆண்டுக்கான மாதிரி நிதிநிலை பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்துள்ளது.

இந்த மாதிரி பட்ஜெட்டை நேற்று சென்னையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெ.குரு எம்.எல்.ஏ., பா.ம.க. சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க. தயாரித்துள்ள மாதிரி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் குறித்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், ‘’தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பா.ம.க. கடந்த 9 ஆண்டுகளாக மாதிரி நிதி நிலை அறிக்கையை முன்வைத்து வருகிறது. இப்போது 10-வது மாதிரி நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

நிதி நிலை தயாரிப்பதற்கு முன்பாக தமிழக அரசு கடந்த நிதி நிலை அறிக்கையில் அளிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வளவு? அவை எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது? என்ற முழு அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்கவேண்டும்.


தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிதிநிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். பா.ம.க. சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாதிரி பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு விதை, உரம், உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.


12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கநடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது. இவற்றை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு குழு அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் துவக்கப்படும்.


மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறவும், மற்ற மாநிலங்களில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் விலை கொடுத்து வாங்கி, விரைந்து செயல்பட்டு மின் தட்டுப்பாட்டை போக்குவோம்.

உலக அளவில் சிறப்பு பெற்ற காவல்துறை அரசியல் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறையாக மாற்றப்படும். மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கேற்ப பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி போன்றவற்றில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.94,523.94 கோடியாக இருக்கும். கடந்த ஆண்டின் வருவாய் வரவான ரூ.85,685 கோடியைவிட ரூ.8.838.81 கோடி அதிகமாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றுவோம்.



தமிழக அரசு கூடங்குளம் பிரச்சினையில் நன்றாக நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்ற மாயதோற்றத்தை தமிழக அரசும், சிலரும் சேர்ந்து உருவாக்கிவருகிறார்கள்.

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராடுபவர்களை கொச்சைப்படுத்துவது, போராட்டத்தை நசுக்குவது, போராட்டக்காரர்களை கைதுசெய்வது போன்றவை தேவையற்றது. பல்வேறு பிரச்சினைக்கு இதுவழிவகுக்கும்.


இடைத்தேர்தல் தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரே ஒரு இடைத்தேர்தலில்தான் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அது எம்.ஜி.ஆர். காலத்தில் என்று நினைக்கிறேன்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நேர்மையாக, நாணயமாக, நாணயம் கொடுக்காமல் நடைபெற்றது என்று யாராவது சொல்ல முடியுமா? பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியை உருவாக்க நிச்சயம் முயற்சி செய்வோம்’’ என்று கூறினார்.

Saturday, March 17, 2012

பாமக சார்பில் திராவிட மாயை குறித்த கருத்தரங்கு

பாமக சார்பில் திராவிட மாயை குறித்த கருத்தரங்கு சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்த அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், "இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது திமுக தலைவர் கருணாநிதி காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்க வந்தார். 3 மணி நேரத்திற்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி மதிய உணவு நேரத்தின் போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னும் குண்டு வீசப்பட்டது. இது குறித்து கேட்டபோது மழை வி்ட்டும் தூவானம் விடவில்லை என்று கூறினார்.

போர் நடந்தபோது நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். இப்போது அவர் அண்ணா நூலகத்திற்காக தீக்குளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். உண்மையான போராளிகள் யாரும் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். தனி ஈழத்தின் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்," என்றார்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாதிப் பிரச்சனை குறைந்தபாடில்லை. மேலும் மக்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது என்று அவர் மீண்டும் குற்றம்சாட்டினார்.

அந்த கருத்தரங்கில் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, திரைப்பட இயக்குநர் வி. சேகர், தமிழாலயம் இயக்குநர் கு. பச்சைமால், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் க. சக்திவேல் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்ட பாமக அமைப்புச் செயலாளர் மு. ஜெயராமன் நன்றி கூறினார்.

காடுவெட்டி குரு வேண்டுகோள்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் மே 5-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு விளக்க பொதுக் குழு கூட்டம் வன்னியர் சங்கம் மாநில தலைவர் சிட்டி பாபு தலைமையில் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் வேணுபுவனேஸ்வரன், மாவட்ட தலைவர் ஆடியபாதம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்முருகன், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் தங்கத்துரை, மாவட்ட தலைவர் சேகர், பழனிசாமி, செல்வமகேஷ், தமிழ்செல்வி, இளமாறன், கிருஷ்ணகுமார், பாஸ்கர், ராஜேந்திரன், பசுமை தாயகம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க மாநில தலைவரும், ஜெயகொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான செ.குரு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மாவட்ட துணை பொதுச் செயலாளர் திருஞானம் வரவேற்று பேசினார்.

குரு எம்.எல்.ஏ., ’’வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்றாலும் வெற்றி பெறும். நமது வன்னியர் குல சமுதாய மக்களின் மீது என்றும் அக்கறை கொண்டும், அயராது பாடுபடும் ஒப்பற்ற ஒரே தலைவர் நமது இனமான காவலர் டாக்டர் ராமதாஸ் மட்டும் தான்.

தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக மக்கள் வாழ்ந்தும், சாதிக்க முடியாத நிலையில் உள்ளோம். அதற்கு காரணம் நமது ஒற்றுமையின்மை தான். அதனை தவிடுபொடி யாக்கும் அளவிற்கு இந்த மாவட்டத்தில் லட்சக்கணக் கா

தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ் இன, மொழிக்கு கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அவருடன் நேரடியாக விவாதிக்க, தான் தயாராக இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

பா.ம.க., சார்பில், சென்னையில் நேற்று நடந்த "திராவிட மாயை' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திராவிடம் என்ற மாயையை உருவாக்கி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகளை, பிற மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டன. ஆற்று நீர் உரிமைகள் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரம் அடைந்ததற்கு, திராவிடக் கட்சிகளே காரணம். திராவிடம் என்ற மாயையால் தமிழகம் சீரழிந்தது பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே "திராவிட மாயை' கருத்தரங்கை நடத்துகிறோம். திராவிடம் என்ற சொல்லை கட்சிப் பெயரில் கொண்டுள்ள தி.மு.க., தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டது. அதன் தலைவர் கருணாநிதி, தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் அவர் செய்தது என்ன? சாதியை ஒழிக்க என்ன செய்தார். ஒரு தெரு அல்லது ஒரு சிற்றூரில் சாதியை ஒழித்துள்ளாரா? கடவுள் இல்லை என்பதில், அவரின் தற்போதைய நிலை என்ன?

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையைக் கொண்டு ஆட்சிக்கு வந்தார், இப்போது அக்கொள்கையின் நிலை என்ன? பெண்ணுரிமைக்காக அவர் செய்தது என்ன? அவருடைய "டிவி'க்கள் பெண்ணுரிமைக்குத் தரும் முக்கியத்துவம் என்ன? பார்ப்பனர் எதிர்ப்பிலேயே இப்போதும் இருக்கிறாரா? தமிழும், தமிழ் இனமும் தான் ஆதியில் தோன்றியது என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, தமிழர் முன்னேற்றக் கழகம் என மாற்ற வேண்டியது தானே? தமிழைச் செம்மொழியாக உயர்த்தியதாகக் கூறும் கருணாநிதி, செம்மொழிக்காக என்ன நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்துள்ளார். தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, இப்போது தான் தோன்றியதா? ஆங்கிலம், தமிழ் என இரு மொழிக் கொள்கை கொண்ட கருணாநிதிக்கு, தமிழ் என்ற ஒரு மொழிக் கொள்கை எப்போது வரும். சாராயம், திரைப்பட மோகம் என தமிழ் இனத்தை அடிமையாக்கியதைத் தவிர, தமிழ் இனத்துக்கு உருப்படியாகக் கருணாநிதி செய்தது என்ன? அப்படிச் செய்திருந்தால், அது குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விவாதத்தில் பசுமைத் தாயகம் பங்கேற்றுள்ளது-டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடந்து வரும் விவாதத்தில் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பும் பங்கேற்றுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஆதரிப்பது குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசு வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்பார்த்தது.

ஆனால் குடியரசு தலைவர் உரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் வெற்றி பெற செய்வதற்காக தனிப்பட்ட முறையில் நானும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

என்னால் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு, ஐ.நா.வின் அதிகாரபூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால், மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக தமிழர் பேரவையின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்க தமிழ் அரசியல் பேரவையைச் சேர்ந்த மருத்துவர் யசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தை சேர்ந்த சட்ட வல்லுநர் தாஷா மனோரஞ்சன்,

தமயந்தி ராஜேந்திரன், இலங்கை மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் அலிபைதூன் ஆகியோர் பசுமை தாயகம் சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சனையில் உலகத் தமிழர்கள் இடையே நிலவும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 11, 2012

லோக்சபா தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டி

சேலம்:""வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிட உள்ளது. திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள், எங்களைப் போல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவிக்க முடியுமா, அதற்கு தைரியமிருக்கிறதா?'' என்று, அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.சேலத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு மாவட்டத்திலும், பா.ம.க.,வில் இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையும், லோக்சபா தேர்தலுக்கான பொறுப்பாளர் நியமனமும் நடந்து வருகிறது. பா.ம.க.,வின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சென்று கூறுங்கள் என, அவர்களிடம் வலியுறுத்துகிறோம்.மத்தியபிரதேசம், இந்தூரில், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில், அனைத்து உயர் அதிகாரிகளும், கையெழுத்திட்ட பின் தான், நான் கையெழுத்திட்டுள்ளேன். ஊடகங்கள் தான், அவற்றை பெரிதுபடுத்துகின்றன.வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, March 10, 2012

நாங்கள் எது செய்தாலும் புதுசா செய்வோம் : அன்புமணி ராமதாஸ்

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘’தமிழகத்தில், மிக மிக வேகமாக வளரும் கட்சி, பா.ம.க., மட்டும் தான். இளைஞர்கள் அதிகம் உள்ள ஒரே கட்சி, பா.ம.க., மட்டும் தான். சில கட்சிகளில், 60 வயதைக் கடந்த சீனியர் சிட்டிசன்கள், இளைஞர் அணி நிர்வாகிகளாக உள்ளனர்.

நாங்கள் எது செய்தாலும் புதுசா செய்வோம். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,- அ.தி.மு.க., மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

மின்சாரம் இல்லாததால், தமிழகம் தற்போது இருண்டு கிடக்கிறது. எங்களுக்கு ஒரே ஒரு ஆண்டு மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள், நாங்கள் மாற்றிக் காட்டுவோம். தி.மு.க., முடிந்துபோன கட்சி.

அக்கட்சியில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை பிரச்சனை உள்ளது. அ.தி.மு.க., திரும்ப வராது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.

சினிமா கலாச்சாரம் என்று ஒழியுதோ, அன்று தான் தமிழகம் உருப்படும். லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிடும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ம.க., தனித்து நிற்கப்போகிறோம்’’என்று கூறினார்.

Thursday, March 8, 2012

முலாயம்சிங்கிற்கு ராமதாஸ் வாழ்த்து

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றிப் பெற்று இருப்பதையடுத்து அக்கட் சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவ்,

மாநில தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.

Monday, March 5, 2012

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்

செஞ்சி: ""தமிழகத்தில் வரும் 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:
வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது. இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும். 2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும். நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம். அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை. 15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும். பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.

நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்.1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல், இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது.எல்லோரும் ஓடி வாருங்கள்; 2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம். புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்? நீங்களே பதில் சொல்லுங்கள். இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போது நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தியும், உங்கள் ஊர்காரரும் (செஞ்சியார்) சந்து பொந்து, மூளை முடுக்கெல்லாம் சென்று தி.மு.க.,வை வளர்த்தனர்.இப்போது விழுப்புரத்தில் ஒருவன் கேட்கிறான் (பொன்முடியை மறைமுகமாக குறிப்பிட்டு) உங்கள் ஊர்காரரை யார் என்று? அவர் யார் என்பதை நீங்கள் தான் ஞபாகப்படுத்த வேண்டும்.அடுத்தவர்களின் கொடியை பிடித்ததால் கோழைகளாக மாற்றப்பட்டோம். இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை.

இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை. 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: