Sunday, March 31, 2013

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம்: ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்,

உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலுவையில் மரித்து, பின்னர் இன்று உயிர்த்தெழுந்த இயேசு உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றி முழுமையான மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்புவாராக என வாழ்த்துகிறேன்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது.

இயேசு பிரானின் வாக்குப்படி, தமிழக மக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்கள் அனைத்தும் வெகுவிரைவில் நீங்கி, விடிவுகாலம் பிறக்கும் ; ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப்படுவதுடன், இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; -அதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்ற புதிய நம்பிக்கையுடன் இந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாட வாழ்த்துகிறேன்.

தலையில் முள்முடி; பாரமான சிலுவை; அந்தச் சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை; இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இறைவனிடம் இயேசு மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம். அவரது உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ்வோம் என இந்த நன்னாளில் சூளுரைத்துச் செயல்படுவோம்.

3-வது அணி அமைப்போம்: ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும்.

காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. கொள்கை இல்லாத கட்சிகள். பா.ம.க. தான் கொள்கை உள்ள கட்சி. மேற்கண்டவாறு அவர் கூறினார்.

பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி:



வடசென்னை மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிழல் நிதி அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

மதுவுக்கு எதிராக தொடர்ந்து பா.ம.க. குரல் கொடுத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நமது தொழிலாளர் தோழர்கள், லாரி ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதற்காக நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பா.ம.க சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 31-ந் தேதிக்குள் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நாகப்பட்டினம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் சமூக அக்கறையில் நலன் உள்ள பெரியவர்களை அழைத்து கொண்டு திமுக தலைவர் கலைஞரிடம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்.

ஆனால் அவர் வேலை நேரம் இரவு 11 மணி வரை இருந்ததை 10 மணியாக மட்டுமே குறைத்தார். கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

பா.ம.க. விரைவில் ஆட்சிக்கு வரும். அப்படி வந்தால் எங்களின் முதல் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்துதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டுக் கூட மது இருக்காது என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

வன்னியர் பெருவிழா: சென்னை வருகிறார் அகிலேஷ்யாதவ்

 


காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பா.ம.க. வின் வன்னியர் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் சங்க செயலாளருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம், ’’மாமல்லபுரத்தில் நடை பெற உள்ள சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும். இம்மாநாட்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து ஒரு கோடி வன்னியர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழகத்தை வன்னியர் ஆள வேண்டும் என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெற உள்ளது’’ என்று கூறினார்.

சென்னை பேரூந்து நிலையம் கட்ட விளைநிலங்களை பறிக்கக் கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதையும், கோயம்பேடு பேரூந்து நிலையம் நிரம்பி வழிவதையும் கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த வண்டலூரில் மிகப் பெரிய  புறநகர் பேரூந்து நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக வண்டலூரில் சுமார் 65 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு புறநகர் பேரூந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புறநகர் பகுதியில் புதிய பேரூந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியானது தான்.

ஆனால், புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக பாசன வசதி கொண்ட வளமான விளைநிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்திருப்பது தான் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலம் தான் அப்பகுதியிலுள்ள 1200க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்துக்கும் விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.

இந்த நிலையில் இவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், அவர்களுக்கு உணவளித்து வந்த விளைநிலங்களை கையகப் படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கது.

புதிய புறநகர் பேரூந்து நிலையம் அமைக்கப்படவுள்ள வண்டலூருக்கு மிக அருகிலேயே கொளப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கும் அதிகமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன் பேரூந்து நிலையத்தை அமைக்க முடியும். அதை விடுத்து வேளான் விளைநிலங்களை கைப்பற்ற அரசு முயல்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழகம் முழுவதும் குறிப்பாக, வட மாவட்டங்களில்  விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நெல் உற்பத்தி குறைந்துவரும் நிலையில், இருக்கும் விளைநிலங்களையும் அரசே பறிக்க முயல்வது நியாயமற்றது.

எனவே, மாநிலத்தின் உணவு பாதுகாப்பு, 1200 குடும்பங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வண்டலூரில் வேளான் விளைநிலங்களை கையகப்படுத்தி புதிய பேரூந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மாறாக கொளப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில்  உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் புதிய பேரூந்து நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய வேண்டும்.

இல்லாவிட்டால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அப்பகுதி மக்களைத் திரட்டி பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

Thursday, March 28, 2013

மதுவிலக்கெல்லாம் அதிமுகவால் முடியாது, அதுக்கெல்லாம அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசு, சமூகத்தின் மீதான அக்கறையுடன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைபாக்கிற்கு விலை சொல்வதைப் போல, கேட்கப்பட்ட கேள்வியை விட்டுவிட்டு, மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழா நடந்த போது அந்த பகுதியில் கூடுதலாக ரூ.50 லட்சத்திற்கு மது விற்பனை ஆனதாக எந்த அடிப்படையும் இல்லாத, ஓர் அவதூறை அவையில் கூறியிருக்கிறார்.
அதன்பின் மற்றொரு பா.ம.க. உறுப்பினர் கணேஷ் குமார் இப்பிரச்சினையை நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் எழுப்பியபோதும், இம்முறையாவது மாமல்லபுரம் இளைஞர் பெருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் மது அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் வேதம் ஓதுவதைப் போல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், உழைக்கும் பாட்டாளி சமுதாயத்தை குடிகார சமுதாயம் என்று அவர் அவமரியாதை செய்திருக்கிறார். அமைச்சரின் இந்த வாய்நீளப் பேச்சு கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘‘பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்... துணிவும் வர வேண்டும்'' என்பது எம்.ஜி.ஆர். நடித்த ஒரு பாடலின் வரியாகும். ஆனால், எம்.ஜி.ஆரின் வழிவந்ததாகக் கூறிக் கொள்ளும் அ.தி.மு.கவினர் அவையில் காட்ட வேண்டிய பணிவும், மது ஒழிப்பில் காட்ட வேண்டிய துணிவும் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இந்த இரண்டும் இல்லாதவர்களிடம் அவை நாகரீகத்தையோ அல்லது மக்களுக்கு நன்மை அளிக்கும் முடிவுகளையோ எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் , ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. இதைத் தடுக்க மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 24 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதனால் இன்று மதுவுக்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டிய தமிழக அரசு, இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்துகொண்டிருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. மேலும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்ற பொய்யான சாக்கிற்குள் ஒளிந்து கொண்டு, மக்களை மது என்ற சாத்தானுக்கு தமிழக அரசு இரையாக்கி வருகிறது. மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத, வானத்தை வில்லாக வளைக்கும் செயல் அல்ல. தமிழக அரசு நினைத்தால், காவல்துறை உதவியுடன் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் கூட இல்லாமல் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியும்.
1991-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டியது அந்தந்த பகுதி காவல்நிலைய அதிகாரிமற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்பு; ஏதேனும் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதேபோன்ற ஆணையை இப்போதும் பிறப்பிப்பதன் மூலம் தமிழகத்தை மதுவோ அல்லது கள்ளச் சாராயமோ இல்லாத மாநிலமாக மாற்றலாம்.
ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு சிறிதும் இல்லை. மது, இலவசம், திரைப்படம் ஆகிய மூன்று தீமைகளுக்கு மக்களை அடிமைகளாக்கி, அவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் திராவிடக் கட்சிகளின் நோக்கமாகும். அதனால் தான் பொங்கல் திருநாளின் போது, பொங்கல் பரிசு என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரூ.100 பணத்தைக் கொடுத்து, மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.
இப்படிப்பட்ட அரசிடம் மதுவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பின் பிறப்பிக்கும் முதல் உத்தரவு மதுக்கடைகளை மூடும் உத்தரவாகத் தான் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்', என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, March 23, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை இனப்படுகொலைகளுக்காக இராஜபக்சேவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து, தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி வந்த மத்திய அரசு, இந்த இரண்டையுமே செய்யாமல் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. இதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும், அதற்காக தமிழர்களும், தமிழக மாணவர்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம் வீணாகி விடாது.
இராஜபக்சே தண்டிக்கப்படும் வரை தமிழகத்தின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடரும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தப்பித்துக்கொண்ட இலங்கை, அடுத்ததாக உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்வது தான் இராஜபக்சேவின் நோக்கமாகும்.
ஆனால், ஓர் இனத்தையே அழித்துவிட்டு உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்ற எண்ணத்தில், இலங்கையில் தமிழர்கள் விரும்பும் மாற்றம் ஏற்படாத நிலையில், கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். அதேபோல் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசியாரும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் இம்மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டிய இந்தியாவோ, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக இலங்கைக்கு உதவி வருகிறது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு பலமுறை நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியா, தற்போது கொலைகார நாடான இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை விடுத்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு, இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழகத்திற்கு உள்ளது. இதுவரை இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்த தமிழக மக்களும், மாணவர்களும், இனி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் & காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட வேண்டும்.
மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வகையில், நாட்டையே உலுக்கும் அளவுக்கு இப்போராட்டம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Friday, March 22, 2013

ஈகியர் விக்ரத்திற்கு வீர வணக்கம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துத் தர வேண்டும் & இனப்படுகொலைகாரன் இராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் நேற்று இரவு தீக்குளித்த விக்ரம் என்ற இளைஞர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார் என்றசெய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன்.
அவருக்கு எனது வீர வணக்கங்களை செலுத்துகிறேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள வெறியன் இராஜபக்சேவின் படைகள் படுகொலை செய்த கொடூரம் ஒருபுறம்... அவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடந்த போராட்டத்தில் மத்திய அரசு செய்த துரோகம் மறுபுறம் என தமிழர்கள் கொந்தளித்துக்கிடக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் முடிவடைந்து விட்டாலும், தமிழர்களுக்கு தனி ஈழம் & இராஜபக்சேவுக்கு போர்க்குற்ற தண்டனை என்ற இலக்கை நோக்கி தமிழக மக்களும், மாணவர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு துணை நிற்பதை விடுத்து தீக்குளிப்பு போன்ற செயல்களில் வீரத்தமிழர்கள் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.
ஈழத்தமிழர்களைக் காப்பதற்கான முயற்சியில் முத்துக்குமாரில் தொடங்கி முருகதாஸ், செங்கொடி, அண்மையில் கடலூர் மணி என இதுவரை 21 பேரை நாம் இழந்திருக்கிறோம். போராட்டக் களத்தில் நெருப்பாய் தகிக்கும் தமிழ் இளஞர்களை இனியும் இழக்க தமிழ் சமுதாயம் தயாராக இல்லை. தமிழீழத்தை வென்றெடுப்பதற்காக இன்னும் பல போராட்டங்களை நாம் நடத்த வேண்டிய நிலையில், தீக்குளித்து உயிர் தியாகம் செய்வது போன்ற செயல்களில் எவரும் ஈடுபடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Saturday, March 16, 2013

பாலுறவு சம்மத வயதை 16 ஆக குறைக்கக் கூடாது! ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லியில் ஓடும் பேரூந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பிறப்பித்தது.
இச்சட்டம் அடுத்த மாத தொடக்கத்தில் காலாவதியாகிவிடும் என்பதால், அதற்கு பதிலாக குற்றவியல் சட்டத் திருத்த மசோதா- 2013 என்ற சட்ட முன்வடிவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
அதேநேரத்தில், இந்த சட்டம் கொண்டுவரப்படுவதன் நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், பெண்கள் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை தற்போதுள்ள 18-லிருந்து 16-ஆக குறைப்பது என்று மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் 10 ஆக இருந்த பாலுறவு சம்மத வயது பல்வேறு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் படிப்படியாக 18-ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பாலுறவு சம்மத வயதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலைநாடுகளில் பாலுறவு சம்மத வயது திருமண வயதை விட குறைவாக இருப்பது சாதாரணமான ஒன்றாகும். அது அவர்களின் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

ஆனால், இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலுறவு சம்மத வயதை அதைவிட குறைவாக நிர்ணயிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அது நமது கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத ஒன்றாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்புகளைக் கண்டு வியந்து, அதை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில், மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மயங்கி, பாலுறவு வயதைக் குறைப்பது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானதாகும்.
குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ‘‘ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகின்றனர்.
21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தங்களின் வாழ்க்கைத்துணை தமக்கு ஏற்றவரா? என்பதை தீர்மானிக்க முடியாது என்பதால், திருமண வயதையே 21-ஆக உயர்த்த வேண்டும்’’ என நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்திருக்கும் நிலையில், பாலுறவு வயதை முன்பிருந்தபடி குறைக்க முயல்வது பிற்போக்குத் தனமான நடவடிக்கையாகும்.
பதின்வயதில் குழந்தைகளின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்; இதனால் அவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்ய முயலுவார்கள் என்பதால் அவர்களை அந்த வயதில் கவனமாக கையாள வேண்டும் என்று சட்டவல்லுனர்களும், மருத்துவ வல்லுனர்களும் எச்சரித்துள்ள நிலையில், இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கலாச்சார தற்கொலைக்கு சமமானதாகும்.
எனவே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவில் பாலுறவு சம்மத வயது தொடர்பான பிரிவை நீக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை ஆய்வு செய்து பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை முடக்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: கல்லூரிகளை மூடி மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும்.
மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தால் சிறு வன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இழந்துவிட்டனர்.
இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களை காட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, March 7, 2013

இலங்கை போர் குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அறிக்கை தாக்கல்:ராமதாஸ்

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்ததன் தொடர்ச்சியான நடைமுறை தீர்மானத்தையே தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஐ.நா. அமைப்பால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத்தாயகம் அறக்கட்டளை சார்பில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
என்னால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத்தாயகம், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத்தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் இர.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும், அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும். அதன்படி பசுமைத்தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பசுமைத்தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டுவருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமானபசுமை தாயகம் அதனால் முடிந்த அளவுக்கு இதை செய்துள்ளது. ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் மத்திய அரசும் இதே போன்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

Monday, March 4, 2013

இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம் டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கை பிரச்சினைக்காக இனி ஒருபோதும் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூரை அடுத்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தமிழ் உணர்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர் தீக்குளித்திருக்கிறார்.

தமிழ் உணர்வாளர் மணி தீக்குளித்த செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்களப்படையினருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sunday, March 3, 2013

''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம்''



சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல்வர் பதவிக்கு அனுப்பிட வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா- மாநாடு‘ நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, வீரபாண்டி தொகுதிகளில் இருந்து வன்னியர் இளைஞர்கள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் சிவதாபுரம் மாணிக்ககவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஐயா அறிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதால் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பயணம் தொடரப்பட்டுள்ளது.
அன்புமணியை முதல்வராக்க வேண்டும்:
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அனுப்பிட வேண்டும்.
வன்னியர் ஒருவர் முதல்வர் ஆனால்தான் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே, யாரையும், எந்த சமுதாயத்தையும் நம்பாமல் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி மற்றும் என்னை போன்றவர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த வேளையில்தான் தர்மபுரி கலவர சம்பவம் நடந்து விட்டது. பாமக, விடுதலை சிறுத்தையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் வேளையில், தர்மபுரி சென்று வந்த திருமாவளவன் அங்கு நடந்த கலவர சம்பவத்திற்கு வன்னியர்களும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சொல்லிவிட்டார்.
அவரும் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தர்மபுரி கலவரத்திற்கு பாமகவும் டாக்டர் ராமதாசும் பொறுப்பாக முடியாது. போலீசார் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றார் குரு.

தர்மபுரி ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

புதுச்சேரி: தர்மபுரியில் நடந்த ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புதுச்சேரியில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் 2 முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். எஸ.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சில திருத்தங்கள் வேண்டும். பல மாவட்டங்களில் இந்த சட்டம் தேவையில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் திருத்தங்கள்தான் கேட்கிறோம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

சில சமுதாய தலைவர்கள் இளைஞர்களை காதல் செய்ய தூண்டுகிறார்கள். டீன் ஏஜ் என்பது காமவலையில் விழும் பருவம். அந்த நேரத்தில் மாணவிகள் பின்னால் சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சுற்றுகிறார்கள். சில நாளில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவி வீட்டிற்கு வரமாட்டாள். அப்போது அந்த மாணவி ஓடிப்போய்விட்டாள் என்று தகவல் வரும். இந்த வலி அனுபவப்பட்ட குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.

இதை இப்படியே விட்டால் வருங்காலத்தில் இன்னும் வலி அதிகரிக்கும். இந்த வேலையை நான் தொடங்கியதும் சிலர் இதை நீங்கள் 10 வருடத்துக்கு முன்பே செய்திருக்கலாம் என்றார்கள். தந்தை பெரியார் கூட பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பக்தவச்சலம், கோவிந்தராஜ் அடங்கிய பெஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஒரு பெண் 21 வயது ஆகும்போதுதான் மேஜர் ஆகிறாள் அதற்கு முன்பு இல்லை என்று கூறியுள்ளது. 21 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலிக்கும் ஆண் வாழ்க்கைக்கு ஏற்றவனா என்று தீர்மானிப்பது கிடையாது.

ஹார்மோன்கள் தூண்டுதலால் திருமணம் செய்துவிட்டு பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்ட திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளனர். 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்தால் பெற்றோர் ஒப்புதல் பெறவேண்டும். இல்லையேல் அத்தகைய திருமணம் செல்லாது, அல்லது ரத்து செய்யலாம் என்றும் இந்த தீர்ப்பினை நாடாளுமன்றச் செயலாளருக்கும் அனுப்பிவைக்க கூறியுள்ளனர்.

நாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டம் அல்ல. அவர்களுக்கு வழிகாட்டுவதாக கூறி சில தலைவர்கள் தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை நன்கு படிக்க சொல்லுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றுங்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைகளில் ஈடுபடவேண்டாம். பிறர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குபோட்டு அலைக்கழிக்க வேண்டாம்.

எங்களது ஏப்ரல் மாத ஆர்ப்பட்டத்துக்குப்பின் மத்திய மாநில அரசுகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 32 அமைப்புகளை தவிர 81 சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களின் வேலை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்தான். இதில் எங்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. எங்களின் இந்த இயக்கத்துக்கு பக்கபலமாக அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களில் சிலர் எங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். 81 சதவீத மக்கள் ஒட்டுமொத்தமாக கூறும்போது, அவர்கள் எங்கள் வழிக்கு வந்தே ஆக வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு கொடுக்கும் கூட்டத்தை கண்டு காவல்துறையே பயப்படுகிறது. வட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் இல்லாததால் அங்கு சாதிக் கலவரங்கள் இல்லை என்றார் ராமதாஸ்.

கேள்வி: இது போன்ற சாதிக் கூட்டங்களில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லையே?

ராமதாஸ்: பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆதரிக்கின்றனர். ஆனால் எங்கள் கட்சியில் இதை பேச முடியாது. நீங்கள் பேசுங்கள் என்று எங்களை முன்னுக்கு தள்ளுவது அவர்கள்தான்.

கேள்வி: தருமபுரியில் ஜாதி கலவரம் நடைபெற்ற பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு உங்களை மையப்படுத்தியா?

ராமதாஸ்: 144 தடை உத்தரவு போடப்பட்டால் நான் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவரும் அப்பகுதிக்கு செல்ல முடியாது. தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

Friday, March 1, 2013

ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் அக்கறையில்லை என்பதை மத்திய அரசு நிரூபித்திருக்கிறது: ராமதாஸ்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 01.03.2013 வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதிதான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50, டீசல் விலை 50 காசுகளும் உயர்த்தப்பட்டன.
அடுத்த 12 நாள்களிலேயே மீண்டும் விலை உயர்த்தியிருப்பது எந்த நீதிக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துள்ள மனிதநேயமற்ற பொருளாதார குற்றமாகும்.
2009 ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 44.24 ஆக இருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 113.86 டாலரிலிருந்து 109.74 டாலராக குறைந்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெயின் விலை 128 டாலரிலிருந்து 131 டாலராக உயர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறது.
இதைப் பார்க்கும்போது எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்துக்காக பொய்யான புள்ளி விவரங்களை அளிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.
மேலும் பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வதுடன், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: